PUBLISHED ON : செப் 30, 2019

கவனம்: தாய்மொழிக் கல்வி
“தாய்மொழியில் எவ்வளவுதான் குறைபாடுகள் இருந்தாலும், தாயின் மார்பை குழந்தை கவ்விப் பிடித்துக் கொள்வதுபோல், பிடித்துக்கொள்வேன். அதுவே என்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பாலைக் கொடுக்க வல்லது” என்றார் காந்தியடிகள். தாம் உருவாக்கிய வித்யாபீடப் பள்ளிகளில் “அந்தந்த வட்டார மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும்” என்றும் ஆணையிட்டார்.
மெக்காலே கல்வி முறையை எதிர்த்தவர் காந்தி. ஆதாரக் கல்வி தாய்மொழியிலேயே இருக்கவேண்டும் என்றவர். துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலேய ஆட்சி நம்மை விட்டுச் சென்றாலும், ஆங்கிலம் நம்மை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்வழிக் கல்வியில் பயின்று சிறந்து விளங்கியவர்களைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழில் பேசினால், நாம் சாதாரணமானவர்களாகக் கருதப்படுவோம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
தமிழ்வழிக் கல்விமுறையில் சீரிய மாற்றங்களைக் கொண்டுவந்து, மாணவர்கள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு மொழி அவசியம். ஆனால், ஆங்கில மொழியைத் தெரிந்துகொள்வதாலேயே அறிவு வளர்ந்துவிடாது.
“நான் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தால், அன்னிய மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை உடனடியாக நிறுத்தி விடுவேன். பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் வரைகூட நான் காத்திருக்க மாட்டேன். தீயதைப் போக்க உடனடியாக மாற்றைக் கொண்டுவந்தாக வேண்டும்.” என்பதே காந்தியின் கூற்று.
அ.அண்ணாமலை, காந்திய அருங்காட்சியக இயக்குநர்.

