மகர எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் குறித்து இப்போது பார்ப்போம். மகா என்ற பயன்பாட்டினை அடிக்கடி பார்க்கலாம். பெரிதினும் பெரிது என்பதை மகா என்று குறிப்பிடுவார்கள். அளவற்ற, உயர்ந்த, மிகுந்த, ஆகிய பொருள்களில் மகா என்ற வடசொல் பயிலும். பிற மொழியிலிருந்து வந்த உரிச்சொல்லாக அதனைக் கருதலாம்.
பெயர்ச்சொற்களின் முன் மகா என்று கூறினால், அதன் பேரளவைக் குறிப்பதாகிவிடும். மகாநதி என்றால் பேராறு. மகாகவிஞன் என்றால் பெருங்கவிஞன். தனித்தமிழ் வழக்கு தோன்றுவதற்கு முன்னால், “மகா சமுத்திரம்” என்று கூறி வந்தார்கள். அதனைத் தமிழில் “பெருங்கடல்” என்று ஆக்கினார்கள். இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் என்று கூறுகிறோம். மகாநாடு என்று கூறாமல் மாநாடு என்று கூற வேண்டும். மா என்பது மகா என்பதற்கு நேரான தமிழ் உரிச்சொல். பட்டத்தரசியை மகாதேவி, மகாராணி என்பார்கள். மகா பிரபு என்பவர் பெரும் கொடையாளி. ஒரு கோவிலில் உள்ள பெரிய மண்டபம் மகாமண்டபம். மகாத்மா என்றால் 'பெரியோர்' என்று பொருள். முடிந்தவரை மகா என்ற சொல்லைத் தவிர்த்துவிடலாம்.
மகிமை என்பது பெருமையைக் குறிக்கும். மகுடம் என்பது மன்னன் அணிகின்ற முடி. தவளையைக் குறிக்கும் வடமொழிச் சொல் மண்டூகம். சுடுகாட்டை வடமொழியில் மயானம் என்பார்கள். அதனைப் பேச்சு வழக்கில் மாசானம் என்கிறோம். மத்தியானம் என்று சொல்லாமல், நண்பகல் என்று சொல்ல வேண்டும்.
மந்திரியைத் தமிழில் அமைச்சராக்கினர். மந்திரத்தை மறைமொழி என்றனர். மந்தம் என்பது சோம்பலைக் குறிக்கும். செரிமானமின்மையை மந்தம் என்று சொல்லலாம். மரணத்தை வடசொல் என்பவர்கள், 'சாவு, இறப்பு, சாக்காடு' ஆகிய தமிழ்ச் சொற்களாக வழங்குகின்றனர்.
மாமிசம் என்று சொல்லாமல் “இறைச்சி, ஊன்” என்று சொல்ல வேண்டும். ஊன் என்பது இறைச்சியுணவைக் குறிக்கும். ஊண் என்பது உண்ணத்தகுந்த அனைத்தையும் குறிக்கும். மிருதங்கம் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மத்தளம். மிருது என்பதற்குத் தமிழில் மென்மை. மிருதுவான என்று எழுதாமல் மென்மையான என்று எழுதுங்கள்.
முகூர்த்தத்தை “முழுத்தம், நல்வேளை” என்கிறார்கள். முக்கியம் என்பதும் வடசொல்தான். முதன்மையான, இன்றியமையாதது என்று சொல்லலாம். முத்திரை என்பதை அடையாளம், பொறிப்பு எனலாம். மூடன், மூர்க்கன் ஆகிய சொற்கள் அறிவில்லாதவனைக் குறிக்கும் வடசொற்கள்.
- மகுடேசுவரன்

