PUBLISHED ON : ஆக 08, 2016

கிராமப்புறங்களில் விவசாயம் நலிவடைந்து, வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நகரங்களில் தொழில் வளர்ச்சி இருப்பதால், அங்கு வேலைவாய்ப்புகள் அதிகம். 'நகரத்துக்குச் சென்றால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்; வாழ்க்கைத் தரம் உயரும்' என்ற நம்பிக்கையில் மக்கள் கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு என சகல வசதிகளும் கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் சிறப்பாக இருக்கின்றன. இதனால் நகரத்தில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதைத்தான் 'நகரமயமாதல்' என்று சமூகவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். 1800ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 2 சதவீதத்தினர் மட்டுமே நகரங்களில் வசித்தார்கள். 1950ஆம் ஆண்டில் நகர மக்கள்தொகை 30 சதவீதமாக உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில், உலகில் முதல்முறையாக கிராமப்புற மக்கள்தொகையைவிட நகர்ப்புற மக்கள்தொகை அதிகரித்தது. இன்றைக்கு 54 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2050ல் 66 சதவீதமாக உயரும் என்று ஐ. நா சபை கணித்துள்ளது.
அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, நகரங்களில் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. 'நகரத்தில் வசிக்கும் அனைவருக்கும், சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், கழிவுநீர் வெளியேற்று வசதிகளைக் கொண்ட வசிப்பிடம் கிடைக்க, அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் ஆவன செய்ய வேண்டும்' என ஐ. நா சபை வலியுறுத்துகிறது.
