PUBLISHED ON : டிச 03, 2018

“சாப்பாட்டை ஏன் மிச்சம் வெச்சுட்டே கதிர்?” உமா மிஸ் கேட்டபோது, கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இன்று சாப்பாடோடு தொட்டுக்கொள்ள வாகாக எந்தப் பொரியலும் இல்லை. எனக்குப் பிடிக்காத கோவக்காய் பொரியல் அனுப்பியிருந்தார் அம்மா.
“வயிறு ஃபுல்லாயிடுச்சு மிஸ்.”
“பொய் சொல்றே…”
நான் அமைதி காத்தேன். என் முகமே காண்பித்துக்கொடுத்துவிட்டது போலும். அசடு வழிந்தேன். உணவுப் பாத்திரத்தை வழித்துச் சாப்பிடும் ஆள் நான். மிச்சம் வைத்தால் சந்தேகம் வரத்தானே செய்யும்.
“மிச்சத்தை என்ன பண்ணுவே?”
“கொட்டிட்டு, பாத்திரத்தைக் கழுவிடுவேன் மிஸ்.”
“வாரத்துக்கு எத்தனை முறை இதுமாதிரி கொட்டுவே?”
“ரெண்டு மூணு வாட்டி…”
“ஏன் சாப்பாடு பிடிக்கலையா?”
“இல்லை மிஸ். கதிருக்கு நாக்கு நீளம். வக்கணையா வேணும். சிப்ஸ், முறுக்குன்னு ஏதாவது கரக்குமுறுக்குன்னு இருந்தாத்தான் ஐயா சுவாரசியமா சாப்பிடுவாரு…” சட்டென்று ஓவியா இடையில் புகுந்து பேச, நான் முறைத்தேன்.
உமா மிஸ் சிரித்தார்.
“இதனால், எவ்வளவு வேஸ்ட் தெரியுமா? அரிசி, பருப்பு, காய், மிளகாய்ப் பொடி வேஸ்ட். உங்கம்மா இதுக்காக போட்ட முயற்சி வேஸ்ட். இதுக்கெல்லாம் ஒரு விலை போட்டா, ஒவ்வொரு முறை நீ சாப்பாட்டைக் குப்பையில் கொட்டும்போதும், குறைந்தபட்சம் 50 ரூபாயைத் தூக்கிப் போடறேன்னு அர்த்தம். இப்படியா வேஸ்ட் செய்வாங்க?”
நான் பேச்சற்றுப் போனேன். பொருட்களுக்கான ரூபாய் கணக்குப் போட்டதில்லை.
“உன்னை மாதிரியான பொறுப்பான பசங்க முதற்கொண்டு, எல்லோருமே இப்படி உணவை வேஸ்ட் செய்யறாங்க. பேப்பரைக் கிழிச்சுப் போடறாங்க. தண்ணீ பாட்டிலைத் தூக்கிப் போட்டுட்டுப் போறாங்க… பார்த்திருக்கியா?”
உண்மைதான். பார்த்திருக்கிறேன். “அதையும் குப்பைத் தொட்டியில போட மாட்டாங்க மிஸ்.”
“அது இன்னொரு பிரச்னை. ஆனால், குப்பை போடுவதே தப்பு. தேவைக்கு அதிகமாக வெச்சுக்கிட்டு, பொறுப்பில்லாமல் பயன்படுத்திட்டு, அதை தூக்கிப் போடும்போது, அதுக்கு பேரு கிரிமினல் வேஸ்ட். இதுக்குத்தான் சீக்கிரமா நம்ம ஸ்கூலை, 'கிளீன் ஸ்கூல், கிரீன் ஸ்கூல்'னு ஆக்கலாமுன்னு இருக்கோம்.”
“அது என்ன மிஸ், கிரீன் ஸ்கூல்?”
“மும்பையில் ஒரு ஸ்கூல் இருக்கு. ஆரம்பிச்சதுலேருந்து இன்னிவரைக்கும், அந்த ஸ்கூல்ல போடற குப்பைகள் வெளியே போவதே இல்லை. முதல்ல குப்பை போடறதே ரொம்பவும் குறைவு. அப்படியே சேருகிற குப்பையை, அங்கே இருக்கும் மாணவர்களே தரம் பிரிச்சுடுவாங்க. வகைப்படுத்திடுவாங்க. தங்கள் ஸ்கூலோட கிரவுண்டையே அவங்க பையோபார்க்காக மாத்திட்டாங்க.”
“ஓ! சூப்பர் மிஸ்.”
“வெளிநாடுகள்ல வேஸ்ட் மேனேஜ்மெண்டுன்னு சொல்லப்படுற கழிவு மேலாண்மையை பள்ளிகளிலேயே ஆரம்பிச்சுடுவாங்க. ஒவ்வொரு ஸ்கூல்லேயும் கிரீன் வாரியர்ஸ் நியமிப்பாங்க. பசுமைப் போராளிகள். இவங்க வேலையே, குப்பைகளை நிர்வாகம் பண்றதுதான். எங்கேயெல்லாம் என்னவெல்லாம் குப்பைகள் உருவாகுதுன்னு கணக்கெடுப்பாங்க. காகிதக் குப்பை, பிளாஸ்டிக் குப்பை, உணவு மிச்சம்… எல்லாத்தையும் கணக்கெடுத்து, ஒரு பள்ளி எவ்வளவு குப்பைகளை உருவாக்குதுன்னு கணக்குப் பண்ணுவாங்க.
அதைக் குறைக்கறதுக்கான பயிற்சிகள் அப்புறம் ஆரம்பிக்கும். இது வெறும் குப்பைக்கு மட்டும்னு இல்லை. அடிப்படையில் குப்பையில் இருந்து ஆரம்பிக்கும். ஆனால், இது ஆற்றல் சேமிப்புக்கான ஆரம்பம்.
தேவையில்லாமல் ஃபேன், லைட், ஏ.சி. போடக்கூடாது. ஒவ்வொருமுறை வகுப்பைவிட்டு வெளியே போகும்போதும், இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டுப் போகணும். தண்ணீரை வேஸ்ட் பண்ணக்கூடாது. முடிந்தவரை எல்லாத்தையும் தூய்மையாக வெச்சுக்கணும். பெங்களூருவுல கூட ஓர் அமைப்பு இதைச் சொல்லிக் கொடுக்குது.”
“ஓ!, அது என்ன அமைப்பு மிஸ்”
“டிராஷனாமிக்ஸ் (Trashonomics) என்ற நிறுவனம் இதைச் செய்துக்கிட்டு வருது. பெங்களூரு, மைசூரு, டில்லி ஆகிய இடங்களில் இவங்க செயல்படறாங்க. மாணவர்களுக்கு கழிவு மேலாண்மை என்றால் என்னவென்று சொல்லித் தராங்க. எவையெல்லாம் கழிவு, அதை எப்படிப் பாதுகாப்பான வழிகளில் பிரிப்பது, எப்படி மறுசுழற்சி செய்வது, குப்பைகளே சேராமல் எப்படிப் பார்த்துக்கொள்வது என்றெல்லாம் இவங்க சொல்லிக் கொடுப்பாங்க.”
“அது எப்படி மிஸ், குப்பையே ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்?”
“சரியான கேள்வி. ஒரு பொருளை நீ எப்போ வேஸ்ட் பண்ணுவே? தேவை இல்லாமல் போகும்போதுதானே. உதாரணமா, நீ உன்னோட கப்போர்டுல ஒரு பொருளை வெச்சுட்டேன்னு நினைச்சுக்கோ. மூணு மாசமா, அதை நீ தேடவே இல்லை. அப்படின்னா, அந்தப் பொருள் உனக்குத் தேவையே இல்லைன்னு தானே அர்த்தம். அது வேஸ்ட். அப்படிப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போதே, அல்லது பயன்படுத்தும்போதே, இது தேவை இல்லைன்னு முடிவெடுக்கத் தெரியணும். நம்மகிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நாளைக்குத் தேவைப்படலாம், நாளன்னிக்குத் தேவைப்படலாம்னு எடுத்து வெச்சுப்போம். பல வீடுகள்ல இப்படித்தான் பிளாஸ்டிக் கவர், பேப்பர், விளையாட்டுச் சாமான்கள்னு நிறைய சேர்ந்துபோகும்.
அதை வேணுமா, வேணாமான்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியணும். எதெல்லாம் வேணாம்னு முடிவு எடுக்கறீங்களோ, அதை இனிமே சேர்க்கவே கூடாது. அதுதான் ஆரம்பம்.
பல நிறுவனங்கள் இப்போ பேப்பர்லெஸ் ஆபீஸ் ஆகிக்கிட்டு வருது. என்னவானாலும், நான் காகிதத்தையே பயன்படுத்தமாட்டேன்னு முடிவு பண்ணிடறாங்க. அவ்வளவுதான். காகிதப் பயன்பாடு இல்லைன்னா, வேஸ்ட்டே இல்லையே.
அதேபோல், உணவு சமைக்கும்போது, வீட்டுல உள்ளவங்க, எதையெல்லாம் சாப்பிட மாட்டங்கன்னு உங்கம்மாவுக்குத் தெரியணும். அவங்க அதைச் சமைக்கறதைத் தவிர்த்துடணும்.
இந்த முடிவுக்கு வரதுதான் சிரமம். வந்துட்டா, ஒரு பெரிய எட்டுப் பாய்ச்சல் ஏற்பட்டுடும். கழிவு மேலாண்மையில முதல் படி, கழிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்றது.”
எனக்குச் சட்டென்று வள்ளுவரின் 'நோய் நாடி, நோய் முதல் நாடி'ங்கற குறள் ஞாபகம் வந்தது. கழிவு மேலாண்மைக்கும் இது பொருத்தமாக அமைந்துவிட்டது! இனிமேல், ஒவ்வொரு பொருளையும் இது தேவையா என்று யோசித்தே வாங்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
