PUBLISHED ON : ஏப் 25, 2016

அலையாதே வெயிலில்: வெயிலில் கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் வறண்டு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், புறஊதா கதிர்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
ஆடைகளில் இறுக்கம் வேண்டாம்: இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.
இரண்டு லிட்டர் தண்ணீர் குடி: இளநீர், மோர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளுடன் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
ஈரத் துணிகளை ஜன்னலில் தொங்கவிடு: வெயிலுக்கு இதமாக குளிர்ந்த காற்றைப் பெறலாம். இருப்பிடமும் குளிர்ச்சியாக இருக்கும்.
உணவுகளைக் காரமின்றி உண்: உணவுகள் காரமாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.
ஊட்டச்சத்துள்ள பழங்களைச் சேர்: பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
எலுமிச்சையைக் கலந்து குளி: உடலுக்குத் தேவையான குளிர்ச்சி கிடைக்கும். வியர்வைப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
ஏ.சி. ஒதுக்கு: நீண்ட காலத்துக்கு ஏ.சி. பயன்படுத்துவதால் நோய்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழலும் சீரழிகிறது. பனையோலை 'தட்டி' அமைத்து நீர் தெளித்து இயற்கை 'ஏர் கண்டிஷனர்'களைப் பயன்படுத்தலாம்.
ஐஸ் பானங்களைத் தவிர்: குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். நீரைக் குளிரவைக்க மண்பாண்டங்களைச் பயன்படுத்தலாம்.
ஒருபோதும் வாசனைத் திரவியங்கள் வேண்டாம்: வாசனைத் திரவியங்கள் வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம்.
ஓடிவிடும் கோடை இவையெல்லாம் செய்: வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும் அதில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொண்டு வெயிலுக்குக் கூலாக ஹாய் சொல்லுவோம்.