PUBLISHED ON : நவ 07, 2016
அ நிறம் | அளவு
இந்தச் சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தக்காலத்தில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
'நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா '
கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை.
மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும். (இன்னா என்பது துன்பம்)
மனத் தெளிவு இல்லாதவன், ஒரு செயலை செய்யத்துணிவது துன்பமாகும், என்பது இதன் பொருள்.
மணம் என்பதை நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் கபிலர்.
'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு'
என்ற குறளிலும் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.
