PUBLISHED ON : மே 16, 2016
வருடம் முழுவதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளுக்கு, ஆங்கிலத்தில் 'பெரினியல் ரிவர்ஸ்' என்று பெயர்.(Perennial rivers) ஜீவநதிகள் என்று நாம் இவற்றை அழைக்கிறோம். இவை மலை உச்சிகளில் இருக்கும் பனிப்பாளங்களில்தான் உருவாகின்றன. கங்கை, சிந்து, நைல் போன்ற நதிகள், மலை உச்சியில் இருக்கும் பனிப்பாளங்கள் உருகியதால் தோன்றியவை.
மலை உச்சியில் இருக்கும் பனிப்பாளங்களுக்கு ஆல்பைன் கிளேசியர்ஸ் (Alpine glaciers)என்று பெயர். நிலத்தில் இருந்து மேலே செல்லும் நீராவி, குளிர்காலத்தில் மலை உச்சியில் பனித்துகள்களாக மாறி,மலைகளின் மேல் படிந்து அடுக்குகள் ஆகின்றன. இவைதான் பனிப்பாளங்கள். இந்தப் பனிப்பாளங்களில் பெரும்பகுதி உறைந்த நிலையில் இருக்கும். இவற்றில் ஒரு சிறு பகுதி உருகுவதால், ஆறுகள் தோன்றுகின்றன.
உலகில் மலை உச்சிகளில் இருக்கும் பனிப்பாளங்கள் மிகவும் குறைவு. பெரும்பகுதி பனிப்பாளங்கள் தென்துருவப் பனிக்கண்டமான அன்டார்டிகாவிலும், வட துருவத்தில் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய தீவுகளிலும், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியிலும் இருக்கின்றன. இவற்றுக்கு கண்டப் பனிப்பாறைகள் (continental glaciers)என்று பெயர்.
பனிப்பாளங்கள் சீராகத் தோன்றி,சீராக உருகினால்தான் பூமியில் நம்மால் வாழ முடியும். சென்ற 18ஆம் நூற்றாண்டு வரை பனிப்பாளங்களின் இயக்கங்களில் பிரச்னை இல்லை. ஆனால், தற்போது தொழில் வளர்ச்சியின் காரணமாக வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு கூடிக்கொண்டே போகிறது. புவி வெப்பமயமாகி, பனிப்பாளங்கள் வேகமாக உருகிவருகின்றன.
பனிப்பாளங்களைக் காப்பாற்றுவது, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வதற்குச் சமம் என்பதை நாம் உணர வேண்டும்.
