PUBLISHED ON : ஆக 05, 2019

இஸ்ரோ, செயற்கைக்கோள்களில் காப்பிடும் (insulation) பணிகளில் பாலியூரித்தேன் (polyurethane) என்ற பொருளை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறது. எடை குறைவான, நீடித்து உழைக்கக்கூடிய பொருளான இதை, வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் இஸ்ரோவில் நடைபெற்று வந்தன. இம்மையம், செயற்கைக் கால்களை உருவாக்கி, அவற்றை திருவனந்தபுரம் மருத்துவமனையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்திச் சோதனை செய்து பார்த்தது.
கடைசியாக, வெறும் 500 கிராம் எடை மட்டுமே கொண்ட செயற்கைக் கால்கள் உருவானது. எடை தாங்குதிறன், வழுக்காத தன்மை, நிறம் மற்றும் வசதி (comfort) ஆகியவற்றில் சர்வதேசத் தரம் கொண்டிருந்த இவை, மாற்றுத்திறனாளிகளால் பெரிதும் விரும்பப்பட்டன.
ஜெய்ப்பூரில் செயற்படும் 'பகவான் மகாவீர் விகாலனக சஹாயத சமிதி' எனும் நிறுவனம், இஸ்ரோவிடம் இருந்து இத்தொழில்நுட்பத்தைப் பெற்றது. பல்லாயிரக்கணக்கான செயற்கைக் கால்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தற்போது 'ஜெய்ப்பூர் பாதங்கள்' (Jaipur foot) என்றும், ஜெய்ப்பூர் கால்கள் (Jaipur Leg) என்றும் அழைக்கப்படும் இவை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. போரினால் மாற்றுத்திறனாளிகளான ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்களுக்கு, செயற்கைக் கால்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
- பா.சரவணன்

