PUBLISHED ON : செப் 23, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. தமிழ் ஆண்டுகளில் லீப் முறை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
லக் ஷணாசரவணன், 7ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.
வானில் ஒரு புள்ளியில் தொடங்கி 360 டிகிரி சுற்றி வர எடுக்கும் காலத்தை, நட்சத்திர ஆண்டு என்பார்கள். அதாவது, ஒரு நாள் நடு இரவு பன்னிரண்டு மணிக்குத் தலைக்கு மேலே தென்படும் விண்மீன், அதேபோல நடு இரவில் பன்னிரண்டு மணிக்குத் தலைக்கு மேலே வர எடுக்கும் காலம். இது 365 நாட்கள் 6 மணி 9 நிமிடம் 10 வினாடி. இதை 365 ¼ நாள் என வைத்துக் கொள்ளலாம். ஒவ்வோராண்டுக்கும் 365 நாட்கள் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ¼ நாட்களை கூட்டி ஒரு நாளாக்கினர். அதை லீப் ஆண்டு என வைத்து, பிப்ரவரியில் கூடுதல் நாளைச் சேர்த்து அந்த ஆண்டு மட்டும் 366 நாட்கள் என கொள்கிறது ஐரோப்பிய நாட்காட்டி. இதுவும் மிகச் சரியல்ல. ஒவ்வோராண்டும் 9 நிமிடம் 10 வினாடி விடுபடுகிறது. எனவேதான், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டைச் சேர்ப்பதில்லை.
தமிழகத்தின் பழைய பஞ்சாங்கத்தைப் பொறுத்தவரை, லீப் ஆண்டு என்ற கருத்து இல்லை. ஒவ்வோராண்டும் ஒரே அளவு நாட்களை கொண்டு அமையாது. சரியாக எந்த நேரத்தில் 360 டிகிரி சுற்றி வருகிறது என்பதை வைத்துப் புத்தாண்டு நாளைத் தீர்மானம் செய்கிறார்கள். எனவே, 364 முதல் 366 நாட்கள் வரை குறிப்பிட்ட ஆண்டில் நாட்காட்டி நாட்கள் இருக்கலாம். எனவே, லீப் ஆண்டு என்ற அமைப்பு, தமிழ் நாட்காட்டிகளுக்குத் தேவையில்லை.
ஆரியபட்டரின் கணக்குப்படி ஒரு நட்சத்திர ஆண்டு என்பது 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம், 30 வினாடி. இது பிழை! மெய்யான ஆண்டைவிட 3 நிமிடம் 20 வினாடி கூடுதலாக இருக்கிறது. ஆயினும், முன்னோர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிடிவாதம் செய்யும் பழைய பஞ்சாங்கங்கள் இதை அப்படியே ஏற்று வருகின்றன. இதன் காரணமாக, பல்வேறு முரண்களை நம் பஞ்சாங்கத்தில் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 21 அல்லது 22இல் தான் மெய்யாக உத்தராயணம் நிகழ்கிறது. ஆனால், பஞ்சாங்கத்தில் இது ஜனவரி 14, பொங்கல் நாளில் ஏற்படுவதாகப் போலியாகக் கூறுகிறார்கள்.
2. பஞ்ச பூதங்களின் சக்தி என்பது இறைவனைக் குறிக்கிறதா?
பா.யோகி, நுண்ணுயிரியல் 2ஆம் ஆண்டு, திருப்பூர்.
'நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்' என்கிறது தொல்காப்பியம். அதாவது, நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள் கலப்பே உலகம் என்பது அதன் பொருள். எடுத்துக்காட்டாக, ஒரு மண் சட்டியை எடுத்துக்கொள்வோம். அது உருவாக கொஞ்சம் களிமண், அதற்கு ஏற்ற அளவில் நீர் இரண்டையும் கலந்து சட்டி வடிவில் செய்து தீயில் சுட்டால் மண் சட்டி தயார். அதாவது சட்டி = நிலம் + நீர் + நெருப்பு (குறிப்பிட்ட விகிதத்தில்) என்றாகிறது. இதில் இறைவன் போன்ற கருத்துகளுக்கு இடமே இல்லை.
சமையல் உப்பு என்பது சோடியம் (Na), குளோரின் (Cl) ஆகிய இரண்டு தனிமங்களின் சேர்வை. சமையல் உப்பில் (NaCl) இருக்கும் உப்புச் சுவையின் குணம் Na வுக்கும் Cl க்கும் கிடையாது. ஆனால், சரியான விகிதத்தில் அவை பிணையும்போது இந்தப் புது குணம் உருவாகிறது. அதுபோல பஞ்ச பூதங்களின் பல்வேறு விகிதச் சேர்க்கையால் பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லாம் உருவாகியுள்ளன.
3. உள்ளங்கை, பாதத்தில் இருப்பதுபோல் பிற தோல் பகுதிகளில் ஏன் ரேகைகள் இருப்பதில்லை?
ஜெ.லட்சுமி தேவிப்ரியா, கோவை.
உடலின் தோல் பகுதி, எல்லா இடத்திலும் ஒன்றுபோல இருப்பதில்லை. சில இடங்களில் நிறமிச் செறிவு காரணமாக, தோல் நிறம் கருமையடையும். சில இடங்களில் நரம்புகள் செறிவாக அமைந்து, தொடுஉணர்வு கூடுதலாக இருக்கும், அதுபோல கை, கால் பகுதிகளில் ஏற்படும் ஒரு வகை மாற்றமே, ரேகைகள். கையால் பொருட்களைப் பிடிக்கவேண்டும். எனவே, பிடி நழுவாமல் இருக்கவே ரேகைகள் உருவாயின என்றும் கருத்துகள் உள்ளன. இதை மெய்ப்பிக்க போதிய ஆதாரங்கள் இல்லை.
4. மழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள், செயற்கையாக நீர் பாய்ச்சும்போது அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்?
ஆர்.சோபனா, 11ஆம் வகுப்பு, ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா, சென்னை.
தாவரங்களுக்கு நீர் தேவை. அதை மழை மூலம் பெறுகின்றன. ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலிருந்து பெறுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. பல தாவரங்களின் இயற்கைப் போக்கின்படி, அவை மழைக் காலங்களில் செழித்து வளரும். எனவே, மழைக்காலம் பச்சைப் பசேல் என இருக்கும். இதைப் பார்த்து மழையில் செழித்து வளர்கிறது என தவறாகக் கருதுகிறோம். சிலசமயம் காற்றில் கலந்துள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற தாவரங்களுக்கு வேண்டிய சத்துகளை மழைநீர் கரைத்துப் பொழியலாம். இதனால், மழைக்காலங்களில் பல தாவரங்களுக்கு கூடுதல் சத்துகள் கிடைக்கும்.
