PUBLISHED ON : அக் 22, 2018

“என்ன கதிர், உங்கம்மா கிட்டே ஒரே புலம்பினாயாமே? என்னாச்சு?” என்று உமா மிஸ், ஸ்கூலுக்குப் போகும்போது பேச ஆரம்பித்தார். அம்மாவைத் தவிர வேறு யாரிடம் போய் புலம்ப முடியும்? படித்தால் மனத்தில் நிற்கமாட்டேன் என்கிறது. ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.
கடைசியில் தேர்வு நெருங்கும்போது, பயம் மட்டுமே மிச்சம். அம்மாவும் அப்பாவும் என் பதற்றத்தைப் பார்த்து, நான் படிக்கும்போது கூட உட்கார்ந்துகொண்டு தார்மீக ஆதரவு வேறு கொடுக்கிறார்கள். ஆனாலும், பிரச்னை தீர்ந்தபாடு இல்லை. அம்மா, அதையெல்லாம் உமா மிஸ்ஸிடம் பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும்.
“என்ன செய்யறதுன்னு தெரியலை மிஸ். எனக்கு குருவி மூளை. ஆனா, படிக்கவேண்டியதோ, எக்கச்சக்கம். என்ன செய்யறதுன்னே தெரியலை மிஸ்.”
“குருவி மூளை, யானை மூளைனெல்லாம் அனாவசியமா போட்டுக் குழப்பிக்காதே. எளிமையா ஆறு உத்திகள் சொல்லித்தரேன். ஞாபகம் வெச்சுக்கோ. படிக்கறது சுலபமா புரிஞ்சுடும்.
முதல்ல, தொடர்ச்சியாக உட்கார்ந்து பல மணிநேரம் படிக்கணும்னு நினைக்காதே. எப்படி டையபடீஸ் காரங்க, அப்பப்ப கொஞ்ச கொஞ்சமா சாப்பிடணும்னு சொல்வாங்களோ, அதுபோல, தொடர்ச்சியான இடைவெளியில படிக்கணும். நீ மொத்தமா இரண்டு மணி நேரம் படிக்கறேன்னு வெச்சுக்கோ. அதை ஒரே மூச்சுல படிக்கவேண்டாம். பதினைஞ்சு பதினைஞ்சு நிமிஷமா பிரிச்சுக்கோ. அல்லது அரை மணி, அரை மணியா பிரிச்சுக்கோ. இரண்டு மணிநேர இடைவெளியில் அரை மணிநேரம் படிப்பு. பெரிய அளவு சோர்வு ஏற்படாது. மூளையில் அழுத்தம் ஏற்படாது. நிதானமாக படிக்கலாம்.
அந்த அரை மணி நேரத்திலேயேயும் இயற்பியல், வேதியியல், கணிதம், தமிழ்னு பிரிச்சுக்கிட்டுப் படி. மொத்த அரைமணிநேரமும் ஒரே சப்ஜெக்ட் படிக்கவேண்டாம். வேறு வேறு பாடங்களை, வேறுவேறு வரிசையில படி. பாடங்களைச் சின்னச் சின்ன பகுதிகளாக பிரிச்சுக்கிட்டு, இப்படி அரைமணி நேரத்துள்ள பொருந்துகிறா மாதிரி மாத்தி அமைச்சுக்கோ.
படிச்சு முடிச்சாச்சுன்னா, அடுத்த அரை மணியில் இன்னொரு வேலை செய்யணும். கேள்வி கேட்கணும். விளக்கிக்கணும், தொடர்புபடுத்திக்கணும். வெறுமனே மனப்பாடம் செய்யக்கூடாது. ஒரு குறிப்பிட்ட பாடத்துல என்ன அம்சங்களை அறிமுகப்படுத்தினாங்க, அதுல சொன்ன விஷயங்கள் எனக்குப் புரிஞ்சுதான்னு கேள்வி கேட்கணும். புரியலைன்னா, மீண்டும் அதை உனக்கு நீயே விளக்கிச் சொல்லிக்கணும். அதைவிட முக்கியமாக, இப்போது நடக்கற ஏதோ ஒரு விஷயத்தோட தொடர்புபடுத்திக்கணும்.
தொடர்புபடுத்திக்கறதுக்கு உதவறது உதாரணங்கள். எந்த ஒரு பாடத்தையும் எடுத்துக்காட்டுகள் இல்லாமல் படிக்கவேண்டாம். எல்லா விஞ்ஞான கோட்பாடுகளுக்கும் எடுத்துக்காட்டுகள் உண்டு. நிஜவாழ்வில் நாம பயன்படுத்தற பல விஷயங்களின் பின்னே, அறிவியல் விளக்கம் இருக்கு. அந்த உதாரணங்களைக் கண்டுபிடிச்சு, ஞாபகம் வெச்சுக்கோங்க. இயல்பாகவே, கோட்பாடுகள் ஞாபகம் வந்துடும்.
இன்னொரு உத்தி, வார்த்தைகளையும் காட்சிகளையும் தொடர்புபடுத்தி ஞாபகம் வெச்சுக்கறது. ஒரு பக்கத்துல இன்ன இடத்துல இன்ன வார்த்தை வரும், இன்ன படம் வரும்னு மனசு போட்டோ பிடிச்சு வெச்சுக்கும். அந்தச் சொல்லும் படமும் இணைஞ்சு ஒரு கோட்பாட்டை, ஒரு கருத்தை, ஒரு முன்னேற்றத்தை எடுத்துச் சொல்லும். ஒருசில வரிகளில் அபரிமிதமான கவித்துவம் இருக்கும். ஒருசில வரிகளில், அழகான ஒலிச் சேர்க்கை இருக்கும். படிக்கும்போதே, மனசுல அந்தச் சொற்சேர்க்கை ஒலி ரீங்காரத்தை ஏற்படுத்தும். அது அப்படியே ஞாபகம் இருக்கும்.
இதற்கெல்லாம் அப்புறம், ஒரு முக்கிய விஷயம் இருக்கு. அதுதான் ரீகால். ஞாபகப்படுத்திப் பார்க்கறது. ஒரு குறிப்பிட்ட பாடத்துல எதெல்லாம் ஞாபகம் இருக்கு. வெப்பம்னு ஒரு பாடம் படிக்கறீங்கன்னு வெச்சுக்கோங்க. அதுல வரிசைக்கட்டி வந்திருக்கும் ஆண்டுகள், ஆய்வாளர்களின் பெயர்கள், அவர்களுடைய கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள்… ஆகியவை சரசரவென ஞாபகம் வரவேண்டும்.
வரவில்லையென்றால் கவலை இல்லை. மீண்டும், உங்களுக்குப் பிடித்த ஓர் ஒழுங்கில், அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்று நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். இதுதான் ஞாபகச் சரடு.
இதையெல்லாம் நிதானமாக ஒவ்வொரு நாளும் செய்யவேண்டும். படிப்புங்கறது ஒரு தொடர் ஓட்டம். தொடர் முயற்சி. தொடர் பயிற்சி. சும்மா ஒரு நாள் மட்டும் ஓடிட்டு, ஏன் நான் ஓட்டப்பந்தயத்துல வெற்றிபெறலைன்னு புலம்பக் கூடாது. ஆங்கிலத்தில் ரிப்பீட்டபிளிட்டி என்று ஒரு சொல் உண்டு. அதாவது மீண்டும் மீண்டும் செய்தல்.
ஒருவிஷயத்தை 21 நாட்கள் தொடர்ச்சியாக செய்துவந்தால், அது பழக்கமாகிவிடும்னு உளவியலாளர்கள் சொல்வாங்க. படிப்பும் அதேமாதிரிதான். தினமும் ஓர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட திட்டத்தோடு, குறிப்பிட்ட பாடங்களைத் தொடர்ச்சியாக படித்து வந்தால், போதும்.
ஞாபகம் என்பது என்ன? ஒரு விஷயத்தைப் போதிய இடைவெளியில், மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தால், அது புத்துணர்வு பெறுவதோடு, கூடுதல் செய்திகளும் அதன் மீது போய் படிந்துகொள்ளும். நேற்று புரிந்ததற்குப் புதிய முகம் இன்று கிடைக்கும். இன்றைய புதிய தகவல் ஒன்று, நாளை உங்கள் ஞாபகச் சேகரத்துக்கு அணிசேர்க்கும். புரிதலை விரிவாக்கும். தெளிவாக்கும்.
கடைசிநேரத்தில் எல்லா பாடங்களையும் படிக்கலாம்னு ஒதுக்கிவைக்கறதுதான், பிரச்னைக்கே அடிப்படை. அதை தவிர்த்துடணும். தினமும் முடிந்தவரை செம்மையாக திட்டமிட்டு பயன்படுத்தினா போதும். பல சமயங்களில், பாடங்களோட குறிப்புகளை, முக்கியமான சொற்களை, சின்னத் தாளில் எழுதிவைத்துக் கொண்டால் கூடப் போதும்.
வண்டியில் போகும்போதோ, வேறேதோ ஒரு சந்தர்ப்பத்தில் நேரம் கிடைக்கும்போதோ, அந்தக் குறிப்புகளைப் பார்த்தாலே போதும். உடனே, பாடங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள லாஜிக்கும், கருத்துகளும் ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்.
மறப்பது என்பது நாம் நமக்கே விதித்துக் கொள்ளும் தண்டனை. ஞாபகம் வைத்துக்கொள்வதற்கான காரணங்களும் உத்திகளும் இங்கே அதிகம். அதையெல்லாம் விட்டுவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிடவே நாம் முயற்சி செய்கிறோம். ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால், எந்தச் சின்னத் தகவலும் மறந்துபோகாது.
கொஞ்சம் திட்டம், கொஞ்சம் நிதானம், கொஞ்சம் உத்திகள் இவை போதும். நிச்சயம் எந்தத் தேர்வையும் சுலபமாக எதிர்கொண்டுவிடலாம்.” என்று முடித்தார் உமா மிஸ்.
வெற்றி இவ்வளவு சுலபமா என்ன என்ற ஆச்சரியமே என்னை யோசிக்க வைத்தது.
