PUBLISHED ON : அக் 22, 2018

“2015இல், கல்லூரி இறுதி ஆண்டில், படிப்பின் ஒருபகுதியான புராஜெக்டுக்காக உருவாக்கப்பட்டதுதான், மின்சாதனங்களின் மின் நுகர்வை, தனித்தனியே கண்காணிக்கும் கருவி. புராஜெக்டுக்காக உருவாக்கப்பட்ட கருவி, மின்சேமிப்புக்கான கண்டுபிடிப்பாக மாறிவிட்டது” என்று பேசத் தொடங்கினார் கோகுல் ஸ்ரீனிவாஸ்.
இக்கண்டுபிடிப்புக்காக, துபாய் அரசின் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதும், 10 தேசிய அளவிலான விருதுகளும் கோகுலுக்கு கிடைத்துள்ளன. தொழில் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இதுவரை 2 லட்சம் டாலருக்கும் அதிகமாக வணிகம் செய்துள்ளார்.
“கல்லூரி புராஜெக்டுக்காக உருவாக்கிய அக்கருவியை, அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் மறந்துவிட்டேன். நண்பர்கள் சிலரின் தூண்டுதலால், 'மேக் இன் இந்தியா' போட்டியில், எனது கண்டுபிடிப்பை அறிமுகம் செய்தேன். அதற்கு, நாட்டிலேயே இரண்டாவது சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து, தேசிய அளவில் 10க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன. சர்வதேச விருதுகளும் கிடைத்தன. அங்கீகாரம் கிடைத்தாலும், இந்தக் கருவியை வைத்து தொழில் தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை.
ஒருமுறை நாங்கள் குடும்பத்துடன் ஒருவாரம் வெளியூர் சென்றோம். அப்போது, வீட்டிலுள்ள ஹீட்டரை அணைக்க மறந்துவிட்டோம். இதனால், மின்கட்டணம் அதிகமாக வந்துவிட்டது. எனது அம்மாதான், 'உனது கருவியை வீட்டிலேயே மாட்டு' என்று சொன்னார். வீட்டில் பொருத்தியதால், மின்நுகர்வு பெருமளவு குறைந்தது.
தங்களுக்கும் இதுபோன்ற ஒன்றைத் தருமாறு உறவினர்களும், நண்பர்களும் கேட்டனர். அப்போதுதான், இக்கருவியைத் தயாரித்து விற்கலாம் என்ற எண்ணம் வந்தது.
நானும் என் நண்பர் ராம் பிரவீனும் இணைந்து 'மினியன் லேப்ஸ்' என்ற நிறுவனத்தை பெங்களூருவில் தொடங்கினோம். துபாய், சிங்கப்பூர் நாடுகளிலும் எங்களது தயாரிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எங்களது கருவியில், 168 மின்சாதனங்களின் மின்நுகர்வை தனித்தனியே கண்காணிக்க முடியும். இணையத்தொடர்பால் வெளியூரில் இருந்தும் கண்காணிக்கலாம்.
முதலில், மருத்துவமனைகள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால், வீடுகளிலும் பொருத்துவதற்கு மக்கள் கேட்கின்றனர். இதனால், வீட்டு உபயோகத்துக்காக கருவி தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றோம்.” என்றார் கோகுல்.

