PUBLISHED ON : அக் 22, 2018

போக்குவரத்தால் கடக்க முடியாத மலைப்பாங்கான இடங்களைத் தேடி, அங்கு பாலங்கள் எழுப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிஷ் பரத்வாஜ். சமீபத்தில் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற இவர், இதுவரை இந்தியா முழுவதும் 127 தொங்கு பாலங்களைக் கட்டி முடித்துள்ளார்.
'பால மனிதன்' (Bridge Man) என்று என்னை மக்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆர்வத்துக்கு ஒரு சம்பவத்தை முக்கியக் காரணமாகச் சொல்வேன். அது, 2007இல் நடந்தது. தெலங்கானாவில், வாரங்கல் மாவட்டத்தின் லக்னாவரத்தில் உள்ள நதியின் குறுக்கே பாலம் கட்டுமாறு அரசு கேட்டுக்கொண்டது. அது, நக்சல் தீவிரவாதத்தின் ஆதிக்கம் நிறைந்த பகுதி.
எனினும், துணிந்து ஒப்புக்கொண்டு, 4 மாதங்களில் பாலத்தைக் கட்டி முடித்தோம். அது மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை, ஊர்மக்களின் கண்களில் வழிந்த கண்ணீரில் இருந்து புரிந்துகொண்டேன். நக்சல்கள் உள்ளிட்ட பலர் என் காலில் விழுந்து நன்றி சொன்னார்கள். ஒரு பாலத்தால் அவர்கள் வாழும் சூழலே மாறியது. ஆயுதத்தால் சாதிக்க முடியாததை, ஒரு பாலத்தால் சாதிக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது.” என்கிறார் கிரிஷ் பரத்வாஜ்.
கிரிஷ் பரத்வாஜின் சொந்த ஊர், மங்களூருவின் சுல்லியா பகுதியில் உள்ள அலெட்டி கிராமம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில், கர்நாடகத்தில் 91 பாலங்கள், கேரளத்தில் 30, ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏழு என்று மொத்தம் 127 பாலங்களைக் கட்டி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றியுள்ளார்.
பரத்வாஜின் குழுவில், 30 நிபுணர்கள் உள்ளனர். அவர்கள், மலையகத்தின் தொலைதூரப் பகுதிகளைக் கண்டறிவதிலும், அவற்றை அருகிலுள்ள முக்கியப் பகுதிகளுடன் இணைக்கும் திட்டத்தை உருவாக்குவதிலும் முனைப்பாகச் செயல்படுகின்றனர். அரசு ஒரு பாலத்தை அமைத்தால் எவ்வளவு செலவு ஆகுமோ, அதில் 10ல் 1 பங்கு செலவிலேயே பாலத்தைக் கட்டி முடிப்பது பரத்வாஜின் சிறப்பு. மேலும், அரசுத் திட்டங்களைப் போல் இவை இழுத்தடிக்கப் படுவதில்லை. அதிகபட்சம் 3லிருந்து 4 மாதங்களுக்கு உள்ளாகவே, பாலங்கள் கட்டி முடிக்கப்படுகின்றன.
“இது முழுக்க சமூக உழைப்புதான். அந்த ஊர்மக்களையே பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்துகிறோம். இதன்மூலம், தாங்களே அந்தப் பாலத்துக்கு உரிமையாளர்கள் என்ற பொதுசொத்தின் மீதான பொறுப்புணர்வும், பிணைப்பும் அவர்களிடையே ஏற்படுகிறது.
அரசின் உதவியுடன் பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. பல சமயங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அப்போது, மக்களை அணுகுவோம். அவர்கள் உடனே உதவிசெய்ய முன்வருகிறார்கள். சில இடங்களில் மட்டுமே, பாலங்கள் கட்டுவதன் அவசியத்தை மக்களுக்குப் புரியவைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்போது, நிலவரத்தை எடுத்துச் சொல்லி, செயற்படுத்திக் காட்டுவதன் மூலம் மக்களிடையே மனமாற்றத்தைக் கொண்டு வருகிறோம்.” என்கிறார் கிரிஷ் பரத்வாஜ்.
இதேபோன்ற சமூக நோக்கிலான கட்டுமானத் திட்டங்களை, தங்கள் நாட்டிலும் செயல்படுத்தித் தரக் கோரி, சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து, பரத்வாஜூக்கு அழைப்புகள் வந்துள்ளன. நீச்சல் சாம்பியனான கிரிஷ் பரத்வாஜ், கடந்த 1984 தொடங்கி 2008 வரை 24 ஆண்டுகள் காவலர் உதவிக்குழுத் துறையில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, சமூக சேவையை முக்கிய நோக்காக கொண்டு செயற்பட்டு வரும் பரத்வாஜின் கட்டுமான நிறுவனத்துக்கு, விரைவிலேயே அவரது மகன் தலைமையேற்க உள்ளார்.

