
துண்டுத் தாள்களை வெட்டாமல் ஒட்டாமல், ஒரே மாதிரியாக மடித்து, இணைத்து அழகிய உருவங்கள் செய்யலாம். இந்தக் கலைக்கு 'மாடுலர் ஓரிகாமி' என்று பெயர். இது ஓரிகாமியின் இன்னொரு வடிவம். இந்த வாரம் வெறும் பன்னிரண்டு துண்டுத் தாள்களை இணைத்து, ஒரு தாமரை மொட்டு செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: வண்ணத் தாள்கள் - பிங்க் நிறம், பச்சை நிறம். இவற்றை 3 செ.மீ. அகலம், 6 செ.மீ. நீளம் அளவிலான துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பிங்க் நிறத் துண்டுகள் 8, பச்சை நிறத் துண்டுகள் 4. ரப்பர் பேண்ட்.
01. ஒரு தாளை எடுத்து அதைக் குறுக்கு வாக்கில், பாதியாக மடித்து விரித்துக்கொள்ள வேண்டும்.
02. அதன் நான்கு முனைகளையும், முக்கோண வடிவில் மடிக்க வேண்டும். முக்கோணங்களின் ஒரு பக்கம் நடுக்கோட்டைத் தொட வேண்டும்.
03. இப்போது நடுக்கோட்டுக்கு மேலும் கீழுமாக இருக்கும் இரண்டு பட்டிகளையும், உள்நோக்கி, குறுக்கு வாக்கில் பாதியாக மடித்துவிடுங்கள்.
04. நான்கு கற்றைகளையும் ரப்பர் பேண்ட் போட்டு ஒரே கற்றையாகக் கட்டிக்கொள்ளவும்.
05. உள்நோக்கி ஒரு பச்சைப் பட்டையும், நடுவில் ஒரு பிங்க் பட்டையும், வெளிநோக்கி ஒரு பிங்க் பட்டையும் வைத்து நான்கு கற்றைகள் செய்துகொள்ளவும்.
06. பிங்க் நிறப் பட்டைகளை வெளிநோக்கி, குறுக்கு வாக்கில் பாதியாக மடித்துக் கொள்ளுங்கள். பச்சை நிறப் பட்டையை உள்நோக்கி மடித்துக்கொள்ளுங்கள்.
07. ரப்பர் பேண்டுக்கு மேலும் கீழும் இருக்கும் எட்டுப் பாதிகளையும் வட்ட வடிவில் விரித்துவிடவும்.
08. மேல் அடுக்கில் இருக்கும் பிங்க் மடிப்புகளை மேல் நோக்கி இதழ் வடிவில் விரிக்க வேண்டும். முதல் மடிப்பை அணைத்தபடி, அடுத்த மடிப்பு இருக்க வேண்டும்.
09. இரண்டாவது அடுக்கையும் விரித்தால் தாமரை மொட்டு அரும்பத் தயார் ஆகிவிடும்.
10. இறுதியாகப் பச்சை மடிப்புகளை சற்று தட்டையாக மடித்துவிட்டால், மொட்டின் அடிப்பகுதியும் தயார்.
-ஓவியா டீச்சர்

