PUBLISHED ON : அக் 13, 2016

கி.பி. 9ம் நூற்றாண்டைச்சேர்ந்த சமணக் கல்வெட்டில், ''குயிற்குடியான அமிர்தபராக்கிரம நல்லூர்” என்று பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வூர் முன்பு குயில்குடி என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுவே தற்போது, கீழ்க்குயில் குடி என்றும், மேலக்குயில்க்குடி என்றும் இரண்டு ஊர்களாக இருந்து வருகிறது.
மதுரையில் இருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். இங்கு இருக்கும் சமணமலையில் சமணச்சிற்பங்களும், சமணப்படுகைகளும் காணப்படுகின்றன. மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது இந்த சமணமலை.
முதல்தளம்
பேச்சிப்பள்ளம் மண்டபம் மாதிரியான சமதளத்தில், எட்டு சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. சுவற்றில் வட்டெழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன. சுனை நீர்ப்பள்ளம் ஒன்றும் இங்கே உள்ளது.
இரண்டாம் தளம்
இதுவும் மண்டபத்தை ஒத்த வடிவத்தில் இருக்கிறது. பராந்தக வீரநாராயணன் (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தம், மனைவி வானவன் மாதேவியின் பெயரில் தொடங்கிய, மாதேவிப் பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளியும் இங்கே இருந்திருக்கிறது என்கிறது தொல்லியல்துறை.
மூன்றாம் தளம்
இத்தளத்தில் பெரிய தூண் ஒன்றினை நிறுவி இருக்கின்றனர். இதிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டினைக் காணமுடிகிறது.
அடிவாரத்தில் ஒரு குகை மலையில் அடிவாரத்தில் உள்ள குகையின் வாயிலில் சமணத் தீர்த்தங்கரர் ஒருவரின் பெரிய சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. குகையின் உள்ளே மேற்கூரையிலிம் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். வட்டெழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுக்கள் இங்கேயும் நிறையக்காணப்படுகின்றன.
இவைபோன்ற சமணபடுகைகளும், குகைகளும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. இவ்விடங்கள் தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கியதற்கு சிறந்த சான்றாக விளங்குகிறன.

