PUBLISHED ON : மார் 20, 2017

கோலிக்குண்டு, தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இந்த விளையாட்டை விளையாட பளபள பளிங்கு உருளைக்குண்டுகள் தேவை. இந்த விளையாட்டை பல ரகமாக விளையாட முடியும். குழிக்குண்டு, தலைக்காய், லாக் மற்றும் பேந்தா என, நான்கு வகை உண்டு. இதில், நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது 'தலைக்காய்' மற்றும் 'பேந்தா'.
தலைக்காய்
இந்த விளையாட்டு, இன்று மால்களில் விளையாடப்படும் 'ஸ்னோ பவுலிங்' ஆட்டத்துக்கு ஒப்பானது. வரிசையாக கோலிகளை அடுக்கிவைத்து அதன் தலைவனாக ஒரு கோலிக்குண்டைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த தலைவனை குறிபார்த்து அடித்தால், அத்தனை கோலிக்குண்டுகளும் நமக்குச் சொந்தம். அது அல்லாது மற்ற குண்டுகளை அடித்தால், அதற்கு வலதுபுறம் இருக்கும் கோலிக்குண்டுகளை நீங்கள் அள்ளிக் கொள்ளலாம். கோலிக்குண்டுகளை ஜெயித்துவிட்டு, அதை பாக்கெட் நிறைய போட்டுக்கொண்டு சிறுவர்கள், இந்த விளையாட்டை விளையாடித்தான் ஜெயிப்பார்கள்.
பேந்தா
ஒரு செவ்வகத்தை வரைந்து, அதை இரண்டாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு பத்து அடி தாண்டி, எல்லைக்கோடு போட்டுக்கொள்ள வேண்டும். அங்கிருந்து குண்டுகளை உருட்டிவிட வேண்டும். யாருடைய கோலிக் குண்டு அந்தச் சதுரத்திற்கு அருகில் இருக்கிறதோ அவர் ஜெயித்தவர். மற்றவர்களுடைய குண்டுகளை எல்லாம் அந்த சதுரத்திற்குள் வைத்துவிட வேண்டும். ஜெயித்தவர் தன் குண்டை பயன்படுத்தி, சதுரத்திற்குள் இருக்கும் குண்டுகளை சதுரத்திற்கு வெளியே வரும்படி அடிப்பார். குண்டு வெளியே வந்ததும் ஜெயித்தவர், சொல்கிற நபர்கள் மட்டும் குண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக ஒருத்தர் மாட்டிக்கொள்வார். அவருடைய குண்டை மற்றவர்கள் மாற்றி மாற்றியடித்து, அந்தச் சதுரத்திலிருந்து விரட்டி விடுவார்கள். யாராவது குறிவைத்து அடிக்கும்போது குண்டை அடிக்காவிட்டால், அவர் அவுட்டாகி விடுவார். தோல்வியுற்றவர், கடைசியில் முட்டிக்கையால் அந்தக் குண்டை சதுரம் வரைக்கும் தள்ளிச் செல்ல வேண்டும்.
குழிக்குண்டு
இதில், குண்டு தங்கும் ஆழத்துக்கு குழி அமைத்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, நேர்கோட்டில் மூன்று குழிகள் போட வேண்டும். விளையாடுபவர்கள், எத்தனை நபர்களோ, வரிசையாக ஒவ்வொரு குழியை நோக்கி கோலிகளை உருட்டி, அதற்குள் தள்ள வேண்டும். இப்படியே வரிசையாக அடுத்தடுத்த குழிக்குச் செல்ல வேண்டும். யார் குழிகளுக்குள் குண்டுகளை உருட்டி, முதலில் வெளியேறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர்.
குண்டை அடிக்கும் முறை
கட்டை-விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் அல்லது ஆட்காட்டி விரலின் விசையால் கோலிக்குண்டை அடிக்க வேண்டும். இதை படத்தில் காணவும்.
கோலிக்குண்டு விளையாடும்போது பாடும் பாட்டு
குண்டு குண்டு
கோலிக்குண்டு,
கடலில் உண்டு
குண்டு நண்டு
எதிர்ப்பவர் கோலியை
உடைக்கும் குண்டு
எனக்கும் உனக்கும்
பந்தயம் உண்டு
தோற்றால் சொல்வேன்
'போடா மண்டு'.

