பழங்கால தமிழகத்தில், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற வணிக நகரங்கள் உலக அளவில் புகழ்பெற்று விளங்கின. அந்த நகரங்களைப்பற்றி, கிரேக்க நாட்டு அறிஞர்களான பிளினி (Pliny), டாலமி (Ptolemy) ஆகியோர், தங்களது நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொடுமணல் உள்ளிட்ட வேறு சில நகரங்களும், பண்டைய தமிழகத்தில் சிறந்து விளங்கியிருக்கின்றன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊர், சங்க காலத்தில் கொடுமணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.மு.முதலாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது.
கொடுமணம் நெசவுத் தொழிலிலும், ஆபரணத் தொழிலிலும் சிறந்து விளங்கியிருக்கிறது. ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மணிக்கற்கள், அருகில் உள்ள அரசம்பாளையம் மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
இரும்பு உருக்காலைகளும் இங்கு நிறைய இருந்திருக்கின்றன. சென்னிமலையில் இருந்து இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்நகரைப் பற்றி, சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரத்திற்கும் ரோம் நகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன.
1961ம் ஆண்டு கொடுமணத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அப்போது, பழங்காலத்து நாணயங்கள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. சங்ககால தமிழர்கள் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கு. இந்நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஆதாரங்களாக உள்ளன.
'கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்'
கொடுமணல் பற்றிய பதிற்றுப்பத்து பாடல் இது.
கொடுமணம் என்னும் ஊரில் செய்யப்பட்ட பொன்நகைகளும், பந்தர் என்ற ஊரில் எடுக்கப்பட்ட முத்துகளும்' என்பது இதன் பொருள்.
- ந.சந்தனச்செல்வி

