PUBLISHED ON : நவ 07, 2016
வரிகள்தான் அரசின் முக்கிய வருமானம். ஆனால், வரிவிதிப்பு, குடிமக்களுக்கு சுமையாகிவிடக் கூடாது.
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கருணையே இல்லாமல் மக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. கிராமங்களில் வரி வசூலிப்பதற்காக தண்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வரி கட்டாத மக்களுக்கு, 'தொழுக்கட்டை மாட்டுதல்', 'அண்ணாந்தாள்' போன்ற கடுமையான தண்டனைகளை அளித்தனர்.ஒரு பலகையில், தலையும் கைகளும் நுழையும் வகையில் துளைகள் இடப்பட்டிருக்கும். வரி கொடுக்காத வர்கள் மீது, அந்தப் பலகை மாட்டப்படும். இதற்கு, 'தொழுக்கட்டை மாட்டுதல்' என்று பெயர்.
ஒருவரை குனியவைத்து, அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டி, அவரது முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைப்பதற்கு, 'அண்ணாந்தாள்' என்று பெயர். அண்ணாந்தாள் தண்டனையை, கடும் வெயிலில் நிறுத்தி அளிப்பார்கள். இந்த இரண்டு தண்டனைகளுடன், கசையடி கொடுப்பதும் வழக்கத்தில் இருந்தது. வரி கொடுக்காதவர்களை சித்ரவதை செய்யக் கூடாது என்று, ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்விளைவாக, 1854ம் ஆண்டு 'சித்ரவதை விசாரணைக்குழு' அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ''தண்டல் அதிகாரிகளுக்கு, வரி வசூலிக்கும் உரிமை மட்டும்தான் உண்டு; தண்டனை அளிக்க உரிமை இல்லை'' என்று, அறிவித்தது.
விசாரணைக் குழுவின் இந்த உத்தரவு, வரி வசூலிக்கும் முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகுதான் மக்களிடம் தண்டல் அதிகாரிகள் பற்றிய அச்சம் நீங்கியது.
- சபிதா

