PUBLISHED ON : டிச 23, 2019

கண்ணாடியை, தமிழகத்தில் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தி இருக்கிறார்கள். உலோகத் தகட்டை, நன்றாக பளபளப்புச் செய்து அதில் முகத்தைப் பார்த்திருக்கிறார்கள். இது மாதிரியான உலோகக் கண்ணாடி திருநெல்வேலி, ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ளது.
அண்மையில் மதுரை துவரிமான் என்ற இடத்தில், ஆற்றங்கரை ஓரத்தில், வட்ட வடிவ உலோகத் தகடு கிடைத்துள்ளது. அதில் ஒரு பகுதியில் சிறு கைப்பிடி உள்ளது. சங்க காலத்திற்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது இந்தக் கண்ணாடி. அதாவது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது.
கண்ணாடிக்கு தமிழில் ஆடி, ஒளி வட்டம், படிமக்கலம், மண்டிலம், கஞ்சனம், முகுரம், அத்தம், புளகம் என்று பல்வேறு பெயர்கள் உள்ளன.
சங்ககாலப் பெண்கள், கண்ணாடியைப் பார்த்துத் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
'வாச நறு நெய் ஆடி வான்துகள்
மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி'
என்ற 'பரிபாடல்' வரிகள்,
'வாசனைத் திரவியம் ஒன்றை, தங்கள் மீது தடவிக் கொண்ட பெண்கள், கண்ணாடியில் படிந்துள்ள தூசுகளைத் துடைத்துப் போக்கிவிட்டு, அதில் தம் எழில் உருவம் தோன்ற கண்டு ரசித்தனர்' என்கிறது.
பெண் ஒருத்தி, கண்ணாடியைப் பார்த்து (மண்டிலம்) அழகு செய்து கொண்டதை அகநானூறு,
'எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்
துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி'
என்கிறது.
கோதை ஆண்டாள் திருமாலை நினைந்து உருகுகிறாள். ஆடை உடுக்கிறாள், அலங்காரம் செய்கிறாள், அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து தன் அழகைத் திருத்திக் கொள்கிறாள். இதனை,
'காறை பூணும், கண்ணாடி காணும், தன்
கையில் வளைகுலுக்கும்,
கூறை உடுக்கும், அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்'
என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
திருப்பாவையில் தோழிகள் கூறுவதாக ஒரு குறிப்பு வருகிறது. இதில் கண்ணாடியை 'தட்டொளி' என அழைக்கின்றனர்.
இராஜ ராஜசோழன் நகர்வலம் செல்லும் முன், கண்ணாடி முன் தன் முகத்தைப் பார்த்து அழகு செய்து கொண்டான் என்கிறது, இராஜராஜன் உலா.
கண்ணாடியை மங்கலப் பொருளாக அரசர்கள் கோவில்களுக்கு தானமளித்தனர். சிதம்பரம் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு திருக்கண்ணாடி ஒன்று குலோத்துங்க சோழனால் அளிக்கப்பட்டது. திருமழப்பாடி கோவிலுக்கு அளிக்கப்பட்ட கண்ணாடி செம்பால் செய்யப்பட்டு பொன் தகடு பொருத்தப்பட்டது.
இதில் பாவைகள் ஆடுவது போலவும், உடுக்கை வாசிப்பது போலவும், மத்தளம் கொட்டுவது போலவும், பாடுவது போலவும், அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் எடை
80 பலம் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.
சிலை, சிற்பங்களிலும் பெண்கள் கண்ணாடி பார்த்து அழகு செய்வது போன்ற புனைவுகள் கோவில்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இத்தகைய சிற்பங்களை திருநெல்வேலி, குற்றாலம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், தென்காசி, கொடும்பாளூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற கோவில்களில் காணலாம்.
தாராசுரத்தில் உள்ள புடைப்புச் சிற்பத்தில் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நிற்கிறாள். மற்றொரு பெண் அதைப் பார்த்து ஒப்பனை செய்துகொள்வது போல் உள்ளது. குடந்தை நாகேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் உள்ள பெண் (உமையவள்), கண்ணாடியை ஏந்தியிருப்பதுபோல் உள்ளது.
- கி. ஸ்ரீதரன்

