PUBLISHED ON : ஜூன் 24, 2019

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறந்துவிட்டது. அடுத்த வகுப்புக்குச் செல்கிறோம் என்ற உற்சாகம் மாணவர்களிடம் இருந்தாலும், புதிய ஆசிரியர்களைப் பற்றிய ஒருவித அச்சமும் மனத்தில் இருக்கும். 'பழைய ஆசிரியரின் பிரிவு, புதிய ஆசிரியர்களின் வரவை எப்படி உணர்கிறீர்கள்?' எனும் கேள்வியோடு, சென்னை, இராயப்பேட்டையில் உள்ள திருமதி மாலதி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம்.
தஹாரீன்அன்ஜும் (10ஆம் வகுப்பு)
கடந்த ரெண்டு ஆண்டுகளா, கல்பனா மிஸ் கிளாஸ் எடுத்தாங்க. பாடத்தைக் கதை மாதிரி, அருமையாக விளக்கிச் சொல்வாங்க. அவங்க பாடத்தில் எல்லோருமே நல்ல மதிப்பெண் எடுப்போம். ஆனா இடையிலேயே அவங்க காலமாகிட்டாங்க. அந்த மாதிரி மிஸ் எங்களுக்கு கிடைக்கமாட்டாங்களான்னு ஏக்கமாக இருக்கு.
ஸ்ருதிகா: (11ஆம் வகுப்பு)
போன ஆண்டு அறிவியல் பாடம் எடுத்தவர் மதன் சார். சூப்பரா பாடம் எடுப்பார். அவர் சொல்லிக் கொடுத்ததைப் புரிஞ்சுக்கவும் முடிஞ்சது. எக்ஸாமிலும் நல்ல மார்க் வாங்கினோம். இப்ப லீவுல இருக்கிறார். இப்பவும் அவரே வந்தால் எங்க வகுப்பு பசங்க எல்லோரும் சந்தோஷப்படுவோம்.
தபசும் பாத்திமா: (11ஆம் வகுப்பு)
நான் 10வது வந்ததும் பிரின்ஸிபால் மேடம் ஆங்கிலம் எடுக்க வந்தாங்க. அவ்வளவு அற்புதமாக சொல்லிக்கொடுத்தாங்க. குறிப்பா அவங்க, கிராமர் எடுத்தால் அவ்வளவு ஈஸியா இருக்கும். அதுக்கு அப்புறம்தான் நானும் வீட்டில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சேன். இந்த ஆண்டும் அவங்களே வந்தாங்கன்னா... என்னைய மாதிரி எல்லோரும் நல்ல மார்க் எடுத்து தேறிடுவோம்.
விஜயராஜ்: (10ஆம் வகுப்பு)
பழைய ஆசிரியரின் பிரிவு உண்மையில் கஷ்டமானது. அவங்க நம்மளைப் பற்றி, ஏற்கெனவே தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. அதனால அதுக்கு ஏத்தாமாதிரி சொல்லிக்கொடுப்பாங்க. புதிய ஆசிரியர்களைப் புரிஞ்சிக்கவே நாளாகும். அதுக்குள்ளாவே காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வந்துடும்.
நவீன்குமார் (12ஆம் வகுப்பு)
முந்தைய வகுப்புகளில் ஆசிரியர்களிடம் நெருக்கமாகப் பழகி இருப்போம். அவர்களிடம் இருக்கும் அட்டாச்மென்ட் புது ஆசிரியர்களிடம் வராது. 'இப்ப 12ஆம் வகுப்பு வந்துட்ட, பொறுப்பா இருந்துக்கனும்னு' வீட்டில் எல்லோரும் சொல்றாங்க. இதுல புதுசா வரப்போற ஆசிரியர்கள் எப்படி இருப்பாங்களோன்னு பயம் வேற; இதுவே மன அழுத்தத்தைக் கொடுக்குது.
யுவன்குமார் (11ஆம் வகுப்பு)
போன ஆண்டு 10வது படிச்சபோது, பாடங்கள் சிரமமாக இருந்தாலும், ஆசிரியர்கள் எளிமையாகப் புரிய வெச்சாங்க. இப்போ 11வது வந்ததும் இங்கேயும் பாடங்களைப் பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கு. பழைய மிஸ்ஸுன்னா நம்மளைப் பற்றியும் தெரிஞ்சு இருப்பாங்க. இப்போ வரப்போற ஆசிரியர்கள் எப்படி இருப்பாங்களோன்னு பயம் இருக்கத்தான் செய்யுது.
