PUBLISHED ON : அக் 10, 2016

சாந்தி: ஏய் மஞ்சு! கையில கறுப்பு மை பாட்டிலோட கோபமா எங்க போற?
மஞ்சு: என்னைய தடுக்காத சாந்தி. என்னோட எதிர்ப்ப காட்ட மை தெளிக்கப் போறேன். யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்.
சா : என்ன பிரச்னை? யார்கிட்ட எதிர்ப்ப காட்டணும்? அதுக்கு ஏன் கறுப்பு மை?
ம : எதிர் வீட்ல இருக்குற அங்கிள் என் சைக்கிள்ல குப்பை கொட்டிட்டுட்டாரு. அதான் அவர் மேல மை தெளிக்கப் போறேன்.
சா : எதிர்ப்பக் காட்ட மை தெளிக்கணும்ன்னு உனக்கு யார் சொன்னது? எல்.கே.ஜி. பசங்க மாதிரி செய்யாத மஞ்சு.
ம : நீ இன்னும் அப்டேட் ஆகவே இல்ல? இப்போலாம் பெரிய பெரிய ஆட்களை எதிர்க்க மை தெளிக்குறதுதான் ட்ரெண்ட்.
சா : அதெல்லாம் தப்பு மஞ்சு! 4,600 வருஷங்களுக்கு முன்னால கண்டுபிடிச்ச மையை கலவரத்துக்காகப் பயன்படுத்துறீங்களே. ச்ச்ச்சே!
ம : எத்தனை வருஷம் ஆனா என்ன? பேனாவ ஆயுதம்ன்னு சொன்னா, அதுக்குள்ள இருக்குற மைகூட ஓர் ஆயுதம்தான்!
சா : ஆனா, அந்த ஆயுதங்கள வச்சுதான் எழுத்துகள் தோன்றிய புதுசுல குகைகள்ல மனுஷங்க எழுதுனாங்க. அப்புறம் புகைக்கரி, எலும்பு பசை, விளக்கெண்ணெய் சேர்ந்த கலவையை வைத்து சீனர்கள் மையைக் கண்டுபிடிச்சாங்க.
ம : இதுகூட சீனாவா? சீனாக்காரங்க தயாரிச்ச பொருள் 4,000 வருஷத்துக்கும் மேல இருக்குறதே ஆச்சரியம்தான்!
சா : இந்தியாவிலயும் 2,400 ஆண்டுகளாக மை பயன்படுத்திட்டு வர்றாங்க. அந்த மையை, 'மசி'ன்னு சொன்னாங்க.
ம : சாந்தி! உன்னோட பேச்சுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். என்னோட எதிர்ப்பக் காட்ட வேற ஐடியா சொல்லு?
சா : 'குப்பைய இந்த மாதிரி தெருவுல போடாதீங்க அங்கிள்'ன்னு சொல்லு. அதுவே பெரிய எதிர்ப்புதான்.
ம : எதிர்ப்பக் காட்ட அஹிம்சை வழில போகச் சொல்ற. இது எனக்கு சத்திய சோதனை!

