PUBLISHED ON : மார் 21, 2016

மு: ஊஃப்.... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
ச: என்னடா ஆச்சு. சத்தம் போடாம இருக்கச் சொல்றயா?
மு: சாப்பாடு ரொம்ப காரமா இருந்துச்சு. நாக்கு எரியுது.
ச: ஓ! விருந்து சாப்பாடா? என்னென்ன பலகாரம் சாப்பிட்ட?
மு: பல காரம் இல்லடா. ஒரே ஒரு காரம்தான்.
ச: பலகாரம்ன்னு நொறுக்குத் தீனிகளைச் சொல்றேன்டா. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ சரியாகிடும். நாக்குல ஆறு சுவைகளை உணரக்கூடிய சுவை மொட்டுகள் இருக்கு தெரியுமா!
மு: ஆறு சுவை இருக்கா? இனிப்பு சுவை மட்டும் இருந்தா டேஸ்ட் பண்ணிட்டே இருப்பேன்.
ச: உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு இவைதான் அந்த ஆறு சுவைகள்.
மு: இதுல என்னடா உடல் வளர்ச்சி இருக்கு? என்னால பேச முடியலன்னா இப்படியா சொல்றது?
ச: இல்லடா முன்னா. உடலுக்குத் தேவப்படுற இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் அடங்கிய உணவுகள்ல இந்தச் சுவைகள் இருக்கு.
மு: அப்படியா! காரச்சுவை என்னென்ன உணவுகள்ல இருக்கு?
ச: இஞ்சி, சுக்கு, மிளகு போன்ற பொருட்களில் காரச் சுவையை அதிகம் உணரலாம். இது, உமிழ் நீரைச் சுரக்க வைக்கும்.
மு: அப்படின்னா, கசப்புச் சுவை எதுல இருக்கு?
ச: வேப்பிலை, சுண்டைக்காய், பாகற்காய் இதுல எல்லாம் கசப்பு அதிகமா இருக்குன்னு உனக்குத் தெரியாதா? தினமும் கொஞ்சம் கசப்பைச் சேர்த்துக்கிட்டா இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சுடும்.
மு: ஓ! இந்த மாதிரி ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி பண்புகள் இருக்கும்தானே.
ச: ஆமா முன்னா. அந்தக் காலத்து மருத்துவங்களும், உணவு முறைகளும் இப்படிதான் இருந்துச்சு. அதான் 'உணவே மருந்து, மருந்தே
உணவு' ன்னு சொன்னாங்க!
மு: நம்ம முன்னோர்கள் கில்லாடிகள்தான்… இல்ல!
