மாணவர்:
தினமும் பள்ளி வருகின்றோம்,
திகட்டத் திகட்டக் கற்கின்றோம்
சினத்தால் நீங்கள் அடித்தாலே
சிணுங்கிக் கொண்டும் ஏற்கின்றோம்!
மாலை ஆனதும் எங்களையே
மறுநாள் வரைக்கும் சுதந்திரமாய்
வேலை இன்றித் திரிந்திடவே
விட்டால் என்ன ஆகிவிடும்?
வீட்டுப் பாடம் என்கின்ற
வெள்ளம் தன்னில் மூழ்குவதால்
ஆட்டம் போடும் வயதினிலே
அய்யா வீட்டுள் கிடக்கின்றோம்!
புத்தகம் கற்கச் சிலமணிகள்,
புவனம் பார்த்திடச் சில நொடிகள்
வித்தக மாகக் கலந்துவிட்டால்
விளையும் அற்புதம், நம்புங்கள்!
ஆசிரியர்:
கற்றல் என்பதைத் தூண்டுகிற
கருவிகள் தானே புத்தகங்கள்,
மற்றதை நீங்கள் பார்க்கின்றீர்,
மதியில் நன்றாய்ப் பதிக்கின்றீர்!
எனினும் இதிலே ஒழுங்கில்லை
என்றால் தொல்லை விளைந்துவிடும்,
பனிபோல் நேரம் கரைந்துவிடும்,
பாய்ந்தே வயதும் ஓடிவிடும்!
பொழுதைப் போக்கப் பலகருவி
புதிதும் பழசும் இங்குண்டு,
பழுதாய் அதனைப் பயன்படுத்தி
பங்கம் ஆனவர் பலருண்டு!
தினமும் எழுதுதல் நற்பயிற்சி,
தெளிவும் ஒழுங்கும் தருமுயற்சி,
மனத்தைச் செலுத்தி எழுதிவிட்டு
மலர்ந்தே ஆடு, அதுமகிழ்ச்சி!

