sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

வாழ்த்துகள் சொல்வோம்...

/

வாழ்த்துகள் சொல்வோம்...

வாழ்த்துகள் சொல்வோம்...

வாழ்த்துகள் சொல்வோம்...


PUBLISHED ON : நவ 07, 2016

Google News

PUBLISHED ON : நவ 07, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் யாரையாவது வாழ்த்துகிறோம். 'பிறந்தநாள் வாழ்த்துகள்', 'தீபாவளி வாழ்த்துகள்', 'பொங்கல் வாழ்த்துகள்'... இப்படி.

அது வாழ்த்துகளா அல்லது வாழ்த்துக்களா?

இங்கே, 'வாழ்த்து' என்பதுதான் வேர்ச்சொல், அது ஒரு கட்டளைச்சொல்/ஏவல் சொல். உதாரணமாக, 'நீ போய் அவனை வாழ்த்து!'

அதை, பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தலாம். 'நான் அவனுக்கு வாழ்த்து சொன்னேன்.'

இந்த 'வாழ்த்து' என்ற சொல்லை, எப்படிப் பன்மையில் எழுதுவது?

தமிழில் 'உ' என்ற எழுத்தில் முடியும் ஒருமைச் சொற்களோடு, 'கள்' என்ற பன்மை விகுதி சேரும்போது, என்ன ஆகும் என்பதற்குப் பல விதிமுறைகள் உள்ளன. அவை அந்தச் சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறும்.

முதலில், அந்தச் சொல்லில் ஒரே ஓர் எழுத்துதான் இருக்கிறது என்றால், அது உகரத்தில் முடியாது. காரணம், தமிழில் குறில் எழுத்துகள் தனிச்சொற்களாக ஆகாது. ஆனால், 'ஊ' என்று முடியும் ஒற்றை எழுத்துச் சொற்கள் உண்டு. அவை 'கள்' உடன் சேரும்போது நடுவில் 'க்' தோன்றும்.

உதாரணமாக: பூ + கள் => பூ + க் + கள் => பூக்கள்

அடுத்து, அந்தச் சொல்லில் இரண்டு எழுத்துகள் இருக்கின்றன என்றால், முதல் எழுத்தைப் பார்க்க வேண்டும். அது குறிலாக இருந்தால், 'க்' தோன்றும், நெடிலாக இருந்தால் தோன்றாது.

உதாரணமாக: ஆடு + கள் => 'ஆ' என்பது நெடில், ஆகவே, 'க்' தோன்றாது => ஆடுகள்

பசு + கள் => 'ப' என்பது குறில், ஆகவே, 'க்' தோன்றும் => பசு + க் + கள் => பசுக்கள்

நிறைவாக, அந்தச் சொல்லில் மூன்று எழுத்துகள் அல்லது அதற்குமேல் இருந்தால், கடைசிக்கு முந்தைய எழுத்தைப் பார்க்க வேண்டும், அது உயிர்மெய்யெழுத்தாக இருந்தால், 'க்' தோன்றாது.

உதாரணமாக: சிறகு + கள் => 'ற' என்பது உயிர்மெய்யெழுத்து, ஆகவே, 'க்' தோன்றாது => சிறகுகள்

ஒருவேளை கடைசிக்கு முந்தைய எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால், 'க்' தோன்றலாம், தோன்றாமலும் இருக்கலாம்.

உதாரணமாக: முத்து + கள் => 'த்' என்பது மெய்யெழுத்து, ஆகவே, 'க்' இல்லாமல் 'முத்துகள்' என்றும் எழுதலாம், 'க்' சேர்த்து 'முத்துக்கள்' என்றும் எழுதலாம்.

அதேபோல்,

வாழ்த்து + கள் => 'த்' என்பது மெய்யெழுத்து, ஆகவே, 'க்' இல்லாமல் வாழ்த்துகள் என்றும் எழுதலாம், 'க்' சேர்த்து வாழ்த்துக்கள் என்றும் எழுதலாம். அறிஞர்கள் இரண்டையும் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதேசமயம், பழக்கத்தில் நாம் 'க்' சேர்க்கும் வழக்கம் அதிகமில்லை. நண்டுகள், திண்டுகள், செருப்புகள் என்று இதற்கு உதாரணங்களை அடுக்கலாம். இவற்றை நாம் நண்டுக்கள், திண்டுக்கள், செருப்புக்கள் என்று எழுதுவதில்லையே.

அதன்படி பார்க்கையில், 'வாழ்த்துகள்' என்பதே சிறந்த பயன்பாடாகத் தோன்றுகிறது.

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us