தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பசித்த வயிற்றுக்குச் சோறிடும் பத்மநாபன்

பசித்த வயிற்றுக்குச் சோறிடும் பத்மநாபன்

பசித்த வயிற்றுக்குச் சோறிடும் பத்மநாபன்


PUBLISHED ON : ஆக 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

“நம்ம ஊர்ல ஓர் இடத்துல பார்த்தா உணவு அளவுக்கு மீறி இருக்கு. இன்னொரு இடத்துல பசியால தவிச்சுப்போறாங்க. இந்த இரண்டையும் இணைக்க முடிஞ்சா எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு தயாரிக்கப்படற உணவு, வீணாகணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க. மீதமாகும் உணவை யார்கிட்ட, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதுன்னு தெரியலை. அதனால தான் உணவைக் குப்பைத் தொட்டியில போடறாங்க. இதுக்கு ஏதாச்சும் ஒரு வழி கண்டுபிடிக்கணும் அப்பதான் தோணிச்சு. அதன் தொடர்ச்சியாத் தான் 'நோ ஃபுட் வேஸ்ட்' (No food waste) என்ற தன்னார்வ அமைப்பை நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கினேன்” என்று பேசத் தொடங்கினார் பத்மநாபன். வயது 24.

இவரது முயற்சியையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலனையும் கண்டு, தமிழக அரசு, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் இவருக்கு, 'இளைஞர் விருது' கொடுத்து கெளரவித்தது. எடுதர்மா, நோ ஃபுட் வேஸ்ட், குப்பைகளிலிருந்து பொருட்கள் உற்பத்தி என பத்மநாபன் பல விஷயங்களைச் செய்து அசத்தி வருகிறார். அவரோடு பேசினோம்:

நோ ஃபுட் வேஸ்ட் திட்டம் எப்படி வெற்றி அடைஞ்சுது?

“உணவு வீணாவதைத் தடுக்க குழந்தைங்ககிட்டப் போய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்தோம். நூறு பள்ளிகளைத் தேர்வு செய்து தினமும் ஒரு பள்ளிக்குப் போவோம். அவங்க சாப்பிட்டு மிச்சம் வைக்கும் உணவை, அவங்களையே எடை மிஷினால அளக்கச் சொன்னோம். எவ்வளவு சாப்பாடு வீணாகுதுன்னு அவங்களே நேரடியா தெரிஞ்சுக்கிட்டாங்க.

ஒருமுறை ஒரு குழந்தை என்கிட்ட கேட்டாள் “சரி, எங்களுக்கு நீங்க சொல்லித் தரீங்க, நாங்க மாத்திக்கிறோம். ஆனா கல்யாண மண்டபத்துல உட்காருவதற்கு முன்னாடியே இலையில சாப்பாடு போடறாங்க. அங்கயும் வேஸ்ட் ஆகுதுதானே?”. அந்தச் சின்ன பெண் கேட்டது நெத்தியில் அடிச்சது போல இருந்தது.

அதுக்கு அப்பறம் உணவு வீணாவதைத் தடுக்க அவசர எண் கான்செப்டை உருவாக்கினோம். அந்த நம்பருக்கு நிறைய அழைப்புகள் வரும். நடுராத்திரியில கூட கூப்பிட்டு 'சாப்பாடு இருக்கு, வர முடியுமா'ன்னு கேட்பாங்க. இன்னிக்கு எங்களால பசிச்ச வயித்துக்கு சாப்பாடு கொடுக்க முடியுது. அப்ப அந்த குழந்தை கேட்ட கேள்விதான் எல்லாத்துக்கும் தொடக்கம்.”

குழந்தைகளோட எப்படி நட்பு ஏற்பட்டது?

“முதலில் நான் என் நண்பர்களோடு சேர்ந்து 'ஸ்பைஸ்' என்ற மாற்றத்துக்கான கல்வி சார்ந்த ஒரு மாடலை உருவாக்கினேன். கோயம்புத்தூரில பல அரசுப் பள்ளிகளுக்குப் போவேன். மற்ற தனியார் பள்ளிகளில் கிடைக்கும் தொழில்நுட்பக் கல்வியை அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். இது தோல்வியைத் கொடுத்தாலும், மாணவர்களோட நட்பு மலர்ந்துச்சு.”

'நோ ஃபுட் வேஸ்ட்'க்கு பெரிய டீம் தேவைப்பட்டிருக்குமே?

“கண்டிப்பா. பலரோட ஒத்துழைப்போடுதான் இதைச் செய்ய முடியும். எங்கெல்லாம் உணவு தேவை இருக்குங்கறதை முழுசா மேப் செய்றோம். எங்க சாப்பாடு கிடைக்கும், எங்க அதற்கான தேவை இருக்குங்கற தகவல்களைச் சேகரிச்சு வச்சுப்போம். எல்லா ஊர்லயும் நம்ம டீம் ஆட்கள் இருக்காங்க. இப்படி நிறைய கைகள் இணைஞ்சுதான் ஒரு நல்ல காரியம் செய்றோம்.”

இதை உங்க வீட்டுல எப்படி பார்த்தாங்க?

“நான் அரசாங்க பொறியியல் கல்லூரியில மெரிட்ல படிச்சேன். எல்லார் வீட்லயும் எப்படி பையன் பெரிய நிறுவனத்துல வேலை செய்யணும்னு ஆசைப்படுவாங்களோ அதேமாதிரி தான் எங்க வீட்லயும் இருந்தாங்க. நான் நல்ல இடத்துல வேலைக்குப் போவேன்னு நினைச்சாங்க. நானும் வேலைதான் செய்றேன். ஆனா, இந்தச் சமூகமோ, பெற்றோர்களோ எளிதா புரிந்துகொள்கிற மாதிரியான வேலை இல்ல இது.”

இப்ப உங்க வீட்டுல உங்கள புரிஞ்சுக்கிட்டாங்களா?

“ம்... இப்ப பரவாயில்ல. என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. நான் என்ன செய்றேன்னு அவங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டியிருந்தது. பேசறதால மட்டும் இது நடக்காது. நம்மளோட செயல்தான் சில விஷயங்களை மாத்தும். அப்பா, அம்மாவுக்கு இப்ப ரொம்ப சந்தோஷம். நான் ஏதோ நல்லதைச் செய்றேன்னு நம்பறாங்க.”

உங்க வாழ்க்கையில மறக்க முடியதா தருணம் எது?

“நிறைய தருணங்கள் அப்படி இருக்கு. என் கையில காசு கிடையாது. படிக்கும்போது வேலை பார்த்து காசு சேர்த்து வச்சேன். அதுதான் ஆரம்ப நாட்களில உதவுனது. ஒரு இடத்துல சாப்பாடு இருக்குன்னு சொல்வாங்க. வண்டியெல்லாம் கிடையாது. பஸ்ல போயி வாங்கிட்டு, அதைத் தேவைப்படும் இடத்துக்கு கொடுக்கணும். 12 ரூபாய் செலவாகும். ஆனா, அதுக்கு பலனா 52 பேர் அந்தச் சாப்பாட்டை சாப்பிடும்போது மனசு முழுக்க நிறைவு ஏற்படும். இதுதான் என்னை இன்னும் ஓட வைச்சுட்டே இருக்கு.”

அரசாங்க உதவி?

“நாம தொண்டு நிறுவனம் நடத்தலாம், ஆனா அரசாங்கத்தை புறக்கணிக்க முடியாது. நேர்மையான வேலைகள் செய்தா அரசாங்கம் நிச்சயம் உதவி செய்ய முன்வரும். நான் பஸ்ஸில தினமும் போயிட்டு வந்தேன். உணவைச் சேமித்து வைக்க, பல இடங்களிலிருந்து எடுத்துவர வண்டி தேவைப்பட்டது. எங்களோட வேலைகளைப் பத்தி கோயம்புத்தூர் நகராட்சிக்குச் சொன்னோம். அவங்க எங்களுக்கு உதவி செஞ்சாங்க. அது மட்டுமில்லாம, குப்பைகளிலிருந்து பொருட்கள் தயார் செய்ய யோசனையும் சொன்னாங்க. இன்னிக்கு அதுதான் எங்களுக்கு பெரிய உதவியா இருக்கு.”

பெற்றோர்களுக்குச் சொல்ல ஏதாவது இருக்கா?

“உங்கள் பிள்ளைகள் மீது எதையும் திணிக்காதீங்க. அவங்க ஏதாச்சும் செய்ய விரும்பினா, மூணு வருஷமாவது அவங்களுக்கு அவகாசம் கொடுங்க. தோல்வி அடைஞ்சுடுவேன்னு பயமுறுத்தாதீங்க. வெற்றிக்கு ஆசைப்படுன்னும் சொல்லத் தேவையில்லை. நல்ல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செஞ்சாலே நிறைவு கிடைக்கும். அதோட உணர்வே வேற மாதிரி இருக்கும். வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டது அதுதான்.”

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us