PUBLISHED ON : பிப் 25, 2019

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி 'உலகத் தாய்மொழி தினம்' கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெரும்பாக்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 3 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழில் கையெழுத்திட்டு புதிய சாதனை படைத்தனர். தமிழர் அனைவரும் தாய்மொழியில் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'தமிழ் எழுச்சி இயக்கம்' எனும் அமைப்பு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரிய வெள்ளைப் பலகையில் பள்ளி மாணவ, மாணவியர், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என, பலதரப்பினரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். மூன்றே மணிநேரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தமிழில் கையெழுத்திட்டு, புதிய சாதனையைச் செய்துள்ளனர்.
இதற்கு முன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் 'மக்கள் பாதை' இயக்கம் சார்பில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒரே நாளில் அதிகமானோர் தமிழில் கையெழுத்திட்டதே சாதனையாக இருந்ததாகவும், அதை மேற்சொன்ன நிகழ்ச்சி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
