PUBLISHED ON : பிப் 25, 2019

மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம் சோனூன். 19 வயதான பூனம், சிறு வயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குடும்பத்தினர் உதவியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
பூனத்தின் தந்தை ஏழை விவசாயத் தொழிலாளி. மகளின் விருப்பத்திற்காக பல சிரமங்களையும் தாண்டி, அவர் தன்னால் இயன்றவரை மகளுக்குப் பயிற்சிபெற உதவினார். ஆனாலும், ஒரு கட்டத்தில் குடும்ப வறுமையின் காரணமாக, பூனத்தினால் தடகளப் பயிற்சியைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. அச்சூழலில்தான் குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் நடத்தும் நிறுவனம், பூனத்தை அடையாளம் கண்டு அவரின் பயிற்சிகளுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது. அவர்களின் உதவியோடு பயிற்சியைத் தொடர்ந்த பூனம், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்றார். ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களும் முயன்றால் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கும் பூனத்தின் வெற்றிப் பயணம் மேலும் தொடர்கிறது.
இந்நிலையில், பூனத்தின் மூத்த சகோதரிக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அவரது தந்தை தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் திணறினார். பூனம் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்தார்.
புனேவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அதில் கிடைத்த பரிசுப் பணமான 1.5 லட்சம் ரூபாயைத் தன் சகோதரியின் திருமணத்திற்காகக் கொடுத்திருக்கிறார் பூனம். மேலும் இது போன்ற மாரத்தான் போட்டிகளில் பங்குபெற விரும்புவதாகவும், அதன் மூலம் தன் குடும்பத்திற்கென சொந்தமாக ஒரு வீடு அமையும் என்று நம்புவதாகவும் வெற்றிக்குப் பின் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காகப் பணம் திரட்டித் தந்த பூனம், தன் சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை. ஆம்! அந்நேரத்திலும் அவர் வேறு போட்டிக்கான பயிற்சியில் இருந்தார். பூனம், வரவிருக்கும் தெற்காசிய தடகளப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
