PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : குற்றச்செயல்கள் நீக்கம்
“கீழப்பாவூர் யூனியன்ல தொடர்ந்து நாலு முறை உள்ளாட்சித் தேர்தல்ல நின்னு வெற்றி பெற்றிருக்கிறேன். பொதுமக்களோட ஒத்துழைப்பு மூலமாத் தான் என்னால இதைச் சாதிக்க முடிஞ்சது.” என்று பேசத் தொடங்கினார் திருநெல்வேலி மாவட்டம், (தற்போது தென்காசி மாவட்டம்) கீழப்பாவூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ்.
1996லிருந்து 2016 வரை, இருபது ஆண்டுகளாக கீழப்பாவூர் ஒன்றியத்தில் தொடர்ந்து வெற்றிபெற்று பணியாற்றி வருபவர். அதில் 2001லிருந்து 2011 வரை இரண்டு முறை தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் சேர்மன் ஆகப் பணியாற்றியவர்.
“இருபத்தியொரு பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது கீழப்பாவூர் யூனியன். இந்த யூனியனுக்கு உட்பட்டிருந்த கிராமங்களில் ஒன்று, கீழவெள்ளக்கால். அதனை முன்மாதிரியான கிராமமா மாத்திக் காட்டணும்னு எங்க யூனியன்ல எல்லோரும் முடிவு செஞ்சோம். காரணம், தமிழகக் காவல்துறையோட குற்றப் பதிவேடுகள்ல “கரும்புள்ளி” குத்தப்பட்டிருந்த கிராமம் தான் கீழ்வெள்ளக்கால் கிராமம். கிராமத்தின் மேல் இருந்த அந்தக் “கரும்புள்ளி”ய முழுசாவே நீக்கணும்னு ரொம்பவே பாடுபட்டோம்.
நடுநிலைப் பள்ளிய உயர்நிலைப் பள்ளியா தரம் உயர்த்த வெச்சோம். எல்லா புள்ளைங்களையும் ஸ்கூலுக்குப் போக வெச்சோம். கிராமப் பொதுமக்கள், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், மாவட்டக் கலெக்டர் என, எல்ேலாரும் ஊர்ல பொது இடத்துல உக்காந்து, குற்றச் செயல்கள் இல்லாத கிராமமா இந்த ஊரைக் கொண்டு வர்றது பத்தி விவாதிச்சோம்.
ஊருக்குள்ளே சாலை வசதிகள், ரேசன் கடைகள் கொண்டு வந்தோம் குற்றச் செயல்கள் படிப்படியாகக் கொறைஞ்சு வந்தது. ஊரும் பசுமையா மாறுனிச்சி. மக்களோட மனங்களும் மாறுச்சு. காவல்துறையோடக் குற்றப் பதிவேட்டுலேர்ந்து அந்தக் “கரும்புள்ளி”யும் சுத்தமா நீக்கப்பட்டுச்சு. மத்திய அரசோட தேசிய அளவிலான “முன்மாதிரி” கிராம விருது ரெண்டு தடவை இந்தக் கிராமத்துக்குக் கிடைச்சது. தமிழக அரசின் “உத்தமர் காந்தி விருது”ம் கீழவெள்ளக்கால் கிராமத்துக்குக் கிடைச்சது.” என்றார் முன்னாள் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காமராஜ்.
