PUBLISHED ON : செப் 23, 2019

கே.டி.அச்சயா (1923-2002)
நாடு: இந்தியா, கர்நாடகம்
துறை: வேதியியல், ஊட்டச்சத்து
இந்திய உணவு வரலாற்றில் கே.டி.அச்சயாவிற்குத் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. ஏனென்றால், இந்திய உணவு வரலாற்றை ஆராய்ந்து,தேடித் தொகுத்து அவற்றைப் புத்தகங்களாக உருவாக்கினார். இதன்மூலம், உணவு வரலாற்றை அடுத்த தலைமுறை வரை கொண்டு சேர்த்த பெருமை, அச்சயாவையே சேரும்.
குறிப்பாக, ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரிய உணவுகளைப் பற்றிய இவரது 'இந்தியன் ஃபுட்: எ ஹிஸ்டாரிகல் கம்பேனியன்' (Indian Food: A Historical Companion) என்கிற புத்தகம், இந்திய மற்றும் உலக உணவுப் பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உணவுத் தொழிற்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது பற்றி, 'தி ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா' (The Food Industries of British India) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம், ஆங்கிலேயர்களின் வரவால் இந்திய உணவுக் கலாசாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிப் பேசுகிறது.
புரத உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு அமைப்பின் (Protein Foods and Nutrition Development Association of India) நிர்வாக இயக்குநராகவும் கே.டி.அச்சயா திறம்படப் பணியாற்றினார். பணிஓய்வு பெற்றபிறகு, உணவு சார்ந்த பல்வேறு பயனுள்ள புத்தகங்களை எழுதத் தொடங்கினார்.
இந்திய உணவுகள், இந்திய எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் ஆலைகளின் கலாசாரம், வரலாறு பற்றி அச்சயா எழுதிய புத்தகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. உணவு வரலாற்றைப் படிக்க விரும்புவோர் நிச்சயம் இவருடைய புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
- கொக்கோ
