PUBLISHED ON : செப் 23, 2019

உலகில் ஒவ்வொரு கண்டத்திலும் நறுமணப் பொருட்களை, பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். நறுமணம், சுவை, நோய்த்தடுப்பு ஆகிய காரணங்களுக்காகச் சமையலில் நறுமணப் பொருட்களைச் சேர்த்து வருகின்றனர். இதில் இந்தியா, மெக்சிகோ, சில வெப்ப மண்டல நாடுகளில் நறுமணப்பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் பயன்பாடு பற்றி ஏகப்பட்ட கட்டுக்கதைகள் உண்டு. உதாரணமாக, உடலின் வெப்பத்தைக் குறைத்து, தேவையான வியர்வையை கொடுக்கும் ஆற்றல் பெற்றது என்பது ஒன்று.
மாமிசங்களில், நறுமணப் பொருட்களை அதிகமாகத் தூவும் கலாசாரம் சில நாட்டு மக்களிடம் உண்டு. அதிகப்படியான மசாலா பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதைச் சாப்பிடுபவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அப்படியெனில், நறுமணப் பொருட்களில் சத்துகளே இல்லையா? இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய சத்துகள் மிகக்குறைந்த அளவே உள்ளன.
வெப்ப மண்டல நாடுகளில் அதிக அளவிலான நறுமணப் பொருட்களைச் சேர்க்கின்றனர். இவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் இருப்பதால்தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என, சமீபத்திய ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டுள்ளது.
நுண்ணுயிரிகள் வேதிமாற்றத்தால், உணவுப் பொருட்களின் தன்மையை மாற்றுகின்றன. இதன் விளைவாக, உணவுப் பொருட்கள் கெட்டுப்போகின்றன. சரியான அளவில் நறுமணப் பொருட்களைச் சேர்க்கும்போது, அவை அழிக்கப்படும்.
சக்திவாய்ந்த நறுமணப் பொருட்கள்
பூண்டு, வெங்காயம், பட்டை, சீரகம், கிராம்பு, மிளகாய் ஆகியவை நாம் பயன்படுத்துகிற நறுமணப் பொருட்களாகும். வெங்காயம், மிளகாய், பூண்டு, சீரகம் ஆகியவை ஒன்று சேரும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். பெரும்பாலும் இவை அனைத்துமே ஒன்றோடொன்று சேர்க்கப்படும் நறுமணப் பொருட்களாகும்.
ஏனெனில், எல்லா நறுமணப் பொருட்களும் எப்போதும் ஒன்றோடொன்று இணையாது. நாம் சேர்க்கும் நறுமணப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து, பிற நறுமணப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளில், 100 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நோய்த்தொற்றுக் கிருமிகள், வீக்கம் ஆகியவற்றுக்கு மஞ்சள் சிறந்த மருந்து. உணவுப் பொருட்களில் மஞ்சள் தூள் சேர்க்கும்போது, அதிலுள்ள கிருமிகளை அழித்து உணவைத் தூய்மையாக்கும்.
உணவில் நறுமணத்திற்கும், சுவைக்கும் என்ற ரீதியில் குறைந்த அளவாக நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெடுத்துவிடக்கூடாது என, உலக செரிமான ஆய்வகம் வலியுறுத்தியுள்ளது.

