PUBLISHED ON : செப் 23, 2019

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் களிமண், எலும்புகள், தாமிரம் மற்றும் வெண்கலத்தினால் உருவான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பாத்திரங்கள், மண் பானைகள் மற்றும் மண் ஓவன்கள், முள்கரண்டி, அகப்பை, கலவையைக் கிளற உதவும் கரண்டிகள், கத்தி வகைகள், தட்டுகள், வடிகட்டிகள், உலக்கை, அரவை இயந்திரங்கள், வாழை இலைத் தட்டுகள், கோப்பைகள் போன்றவை பழங்கால மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.
மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் வெளிவந்த சங்க இலக்கியங்களில், மக்களின் தினசரி வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, உலர் தானியங்களை மாவாக அரைக்க உதவும் உலக்கை மற்றும் தானியங்களை உடைக்க உதவும் திருகைகள், ஈரமாவை அரைக்க உதவும் ஆட்டுக்கல், துவையல் வகைகளை அரைக்க உதவும் அம்மிக்கல் போன்றவை அந்தக் காலகட்டங்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
உணவை மூடி வைக்க மூங்கிலால் செய்யப்பட்ட தட்டுகளும் அப்போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல தாமரை மற்றும் வாழை இலையால் செய்யப்படும் தட்டுகளை அவர்கள் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்கால இந்திய மக்கள், பாத்திரங்களின் வடிவங்களையும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டே வடிவமைத்தார்கள். தேங்காய், மாங்காய், வாழை இலை போன்ற வடிவங்களை அடிப்படையாகக்கொண்டு களிமண், கல், தோல், உலோகம் போன்ற பொருட்களால் பல்வேறு வகையான பாத்திரங்களைத் தயாரித்துப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படித்தான் பாத்திரங்கள் அதன் தோற்றத்தில் மாற்றங்களை அடைந்து நவீனத்துவம் பெற்றன.
- காரா

