PUBLISHED ON : அக் 10, 2016

இயற்கைப் பேரழிவு (Natural disaster) என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பது. புயல், வெள்ளம், கன மழை, சூறாவளி, கடல் கொந்தளிப்பு, சுனாமி, நில நடுக்கம், நிலச்சரிவு, எரிமலை, காட்டுத்தீ, புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால், இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. இயற்கைப் பேரழிவுகளால் மிகையான அளவில் உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
இயற்கைச் சீரழிவுகளால் உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் ஏற்படும் பாதிப்புகள்
* 27 மில்லியன் புலம்பெயர்கிறவர்கள்
* 106 மில்லியன் வெள்ளப் பெருக்கு
* 60 மில்லியன் வறட்சி
* 30,000 வறட்சி காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்பு
நில நடுக்கம் (Earthquake)
பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் தளத் தட்டுகள் (Plates) நகர்வதால் ஏற்படும் அதிர்வைக் குறிக்கும். பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்து உள்ளது. இவை நகரும் தன்மை கொண்டவை.
நிலப் பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும் சுமார் 12 தட்டுகள் சிறியதாகவும் உள்ளன. இந்த ஏழு தட்டுகளில் ஐந்து கண்டங்களும், பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தத் தட்டுகள் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டவை.
இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும் மேலே இருக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தும் நகர்ந்தும் செல்கின்றன. இவை ஒரு வருடத்திற்கு 1 செ.மீ. முதல் 13 செ.மீ. வரை நகர்கிறது.
பூமியின் சுழல் வேகத்திற்கு இது மிக நுண்ணியதாக இருந்தாலும் இவற்றின் லேசான உராய்வு கூட பெரும் நில நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் (International Day for Natural Disaster Reduction) அக்டோபர் 2 ஆவது புதன்
இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல், இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்த 'சர்வதேச இயற்கைப் பேரழிவு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
2004: இந்தியப் பெருங்கடல் நில நடுக்கம் உலக வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய நில நடுக்கம்
பதிவான அளவு: 9.3 ரிக்டர்
உயிரிழப்பு : 2,29,000
2006: ஜாவா நில நடுக்கம்
பதிவான அளவு : 7.7 ரிக்டர்
2008: சிசுவான் நில நடுக்கம் (சீனா)
பதிவான அளவு : 7.9 ரிக்டர்
உயிரிழப்பு : 61,150
ரிக்டர் (Richter magnitude scale)
நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல். அமெரிக்க நில அதிர்வியலாளர் 'சார்லஸ் ரிக்டர்' என்பவர், 1935ல் முதன் முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார்.
நில நடுக்கமானி (Seismometer)
நில நடுக்கத்தைப் பதிவு செய்யும் கருவி
ரிக்டர் - விளைவுகள்
<2 - 0 - உணர முடிவதில்லை
2.0 - 2.9 - புலன் உணரக் கூடியவை
3.0 - 3.9 - சிலரால் உணரப்படுகிறது
4.0 - 4-9 - பெரும்பாலோரால் உணரப்படுகிறது
5.0 - 5.9 - பாதிப்பு
6.0 - 6.9 - பெரும் சேதம்
7.0 - 7.9 - பெரிய நில நடுக்கம்
>8 - பேரழிவு

