PUBLISHED ON : அக் 10, 2016

விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமி நீல நிறமாகத் தெரியும். பூமியின் 70 சதவீத பரப்பை, கடல் போர்வை மாதிரி போர்த்தி இருக்கிறது. இதனால்தான், பூமிக்கு நீல நிறம் வந்தது.
பூமியின் மொத்த நீரளவில், 97 சதவீதம் கடலில் இருக்கிறது. 'முதன்முதலில் கடல் நீர் எப்படி உருவானது?' என்ற கேள்விக்கு அறிவியல் அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களை முன்வைக்கிறார்கள்.
பூமிக்குள் இருந்து உருவானது, என்பது ஒரு விளக்கம். வெளியில் இருந்து வந்தது, என்பது மற்றொரு விளக்கம்.
பூமி தோன்றி, ஒரு கோடி ஆண்டுகள் வரை, எரிமலைகள் வெடித்துச் சிதறின. அப்போது பாறைகளுக்குள் அடைபட்டிருந்த நீர்த்துகள்கள் வாயுக்களாக வெளியேறி வளிமண்டலத்தில் கலந்தன.
தற்போதைய சுற்றுப்பாதையில் பூமி தன்னை நிறுத்திக்கொண்டபோது, பூமி குளிரத் தொடங்கியது. அப்போது வாயு மண்டலத்தில் இருந்த நீராவி, மழையாகப் பொழிந்தது. மழை என்றால் பருவமழை போல, இரண்டு மூன்று மாதங்கள் இல்லை. பல லட்சம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இப்படி பூமியின் துகள்களிலிருந்தே கடல் உருவானது என்று சொல்பவர்களும் உண்டு.
இரண்டாவது விளக்கப்படி, வால் நட்சத்திரங்களும் விண் கற்களும் பூமியைப் பல லட்சம் ஆண்டுகள் தொடர்ச்சியாக மோதின. அவற்றில் இருந்த நீரை நமது பூமியின் மேற்பரப்பு உறிஞ்சிக்கொண்டது. எரிமலையின் செயல்பாட்டால் அந்த நீர் ஆவியாகி, குளிர்ந்து மழையாகப் பெய்து கடலாக மாறியது என்றும் சொல்கிறார்கள்.
கடல் நீர் எப்படி வேண்டுமானாலும் உருவாகி இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் மொத்த நீரும் சுமார் 380 கோடி வருடங்களுக்கு முன்னரே உருவாகிவிட்டது. கடலைப் பற்றி ஆச்சரியமாகச் சொல்ல கடல் அளவு தகவல்கள் இருக்கின்றன.

