
வெயில் கொளுத்தும்போது, நம்மில் பலர் சூரியனைத் திட்டுவோம். ஆனால், சூரியனின் ஒளியில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் கிடைக்கும் சூரிய ஆற்றல் இல்லாமல், பூமியில் உயிரியல், இயற்பியல், வேதியியல் வினைகள் எதுவும் நடைபெறாது. ஆக, சூரியன் இல்லாமல் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது.
சூரிய ஆற்றல் மிக அதிக அளவில் கிடைக்கக்கூடியது. புவியின் ஆயுட்காலம் வரை நிலைத்து நீடித்து இருக்கக்கூடியது. சூரியனின் வெப்பத்தை ஆக்கப் பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்துவது, மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. பொருட்களை உலர வைப்பது, தண்ணீரை சூடுபடுத்துவது, வீடுகளுக்கு வெளிச்ச மூட்டுவது போன்றவை ஒரு சில உதாரணங்கள்.
தற்போது, சூரிய ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வது பரவலாகி வருகிறது. ஒரு நிமிடத்தில் கிடைக்கும் சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டு, உலகின் ஒரு வருட ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யலாம். ஒரு நாளில் கிடைக்கும் ஆற்றலை அறுவடை செய்தால், உலகின் தற்போதைய மக்கள்தொகைக்குத் தேவைப்படும் ஆற்றலை 27 வருடங்களுக்கு வழங்க முடியும்.
இருந்தாலும் பூமியை அடையும் சூரிய ஆற்றலில் மிகச்சிறிய பகுதியை மட்டுமே நாம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம். உலகின் மொத்த மின் உற்பத்தியில் சூரிய ஆற்றல் மின்சாரத்தின் பங்கு, வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே.

