PUBLISHED ON : ஜூன் 03, 2019
'இறை' என்ற சொல்லுக்கு, தலைமை தாங்குதல், கடவுள் என பல பொருளுண்டு. மக்களைப் படைத்துக் காப்பவன் இறைவன். அதுபோல் மன்னனும் மக்களைக் காப்பதால், இறைவனுக்குச் சமானவன் என்று குறிப்பிடுகிறார், திருவள்ளுவர். திருக்குறளில் 'இறை மாட்சி' என்னும் அதிகாரத்தில், மன்னனின் கடமைகளாக வள்ளுவர் வரையறுப்பவை:
* பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து அவற்றை ஈட்டவேண்டும். ஈட்டிய பொருட்களைச் சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.
* அவற்றை முறையாகப் பகுத்து (பிரித்து) வழங்க வேண்டும்.
* மனவுறுதி, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் உடையவனாக இருக்க வேண்டும்.
* எந்த ஒரு செயலிலும் காலம் தாழ்த்தக்கூடாது. கல்வியறிவு, துணிவு நிரம்பியவனாக இருக்க வேண்டும்.
* நீதி நெறியில் தவறாது இருக்க வேண்டும். குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத பெருமையுடையவனாக ஆள்பவன் இருக்க வேண்டும்.
* கடுஞ்சொல் கூறாதவனாக, பொது மக்கள் சந்திப்பதற்கு எளிமையானவனாக இருக்க வேண்டும்.
* இன்சொல் கூறுபவனாக இருக்க வேண்டும். தக்கவருக்குப் பொருளுதவி செய்பவனாக இருக்க வேண்டும்.
* நீதி செலுத்தி மக்களை வருத்தாமல் காக்கின்ற அரசன், பிறப்பால் மனிதன் எனினும் இறைவனாகக் கருதப்படுவான் .
* தன்னைக் குறை கூறுபவர்களையும் பொறுத்துக் கொள்பவனாக இருக்க வேண்டும்.
* கொடை, அன்பு, செங்கோல் முறை, குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கு பண்புகளை உடைய அரசன், பிற ஆட்சியாளர்களுக்கெல்லாம் விளக்குப் போன்றவனாவான் என்கிறார் வள்ளுவர்.

