PUBLISHED ON : அக் 23, 2017

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்லப்படுவதை உண்மையாக்கியிருக்கிறார் மரியோ வேலண்டி (Mario Valenti) எனும் அமெரிக்க சிகாகோ நகர காவல் அதிகாரி. அந்நகரிலுள்ள ஒரு கூடைப் பந்தாட்ட பயிற்சியகத்திற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக நுழைய முற்பட்ட ஒரு பதின்ம வயது இளைஞனைப் பிடித்துவைத்து, அவனைக் கைது செய்ய வருமாறு காவல்துறைக்குக் கோரிக்கை வைத்தார் அதன் மேலாளர்.
அங்கு விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரியான மரியோ, விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் செய்த செயல், புகார் கொடுத்த மேலாளரை மட்டுமல்ல, அந்த இளைஞனையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆம், அச்சிறுவனுக்கு அந்த பயிற்சியகத்தின் உறுப்பினர் கட்டணத்தைத் தம் சொந்தப் பணத்திலிருந்து கட்டினார் மரியோ. காவல் துறை என்பது பொது மக்களைப் பாதுகாக்கத்தானே தவிர சிரமப்படுத்த அல்ல என்று தெரிவித்த இவரது செயல், பொதுமக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
