PUBLISHED ON : நவ 26, 2018

பள்ளி வாழ்க்கை, ஜாலியும் கேலியும் கிண்டலும் நிறைந்தது. ஆனால், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களைக் கேலி என்ற பெயரில் காயப்படுத்துவது தொடர்கிறது. 'பட்டம்' வாசகர்களாகிய மாணவர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, மதிப்பெண்ணை வைத்து சக மாணவனை மதிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டிருந்தோம். திருப்பூர் மாவட்டம், பல்லடம் - அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் நேரில் சென்று அவர்களின் கருத்தைப் பதிவு செய்தோம்.
ர. மோனிகா, 11ஆம் வகுப்பு
இங்கே மாணவரின் தனித்திறமைக்கு யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை. எனக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ளது. ஆனால், நல்ல மதிப்பெண் எடுத்து, நான் சி.ஏ. படிக்க வேண்டும் என, பெற்றோர் விரும்புகின்றனர். மாணவர்களின் விருப்பம் அறிந்து செயற்பட அனுமதிக்க வேண்டும்.
அ. மோகனா, 10ஆம் வகுப்பு
முதல் மதிப்பெண் பெறுவோர், படிப்பில் மட்டுமே சாதிப்பர். ஆனால், தனித்திறமை உள்ளவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமல்ல, நல்ல மனிதனாக வாழ அனைவருக்கும் ஒழுக்கமே அவசியம். மதிப்பெண் அல்ல.
சு. சுவேதன் ராஜா, 9 ம் வகுப்பு
மதிப்பெண்ணுக்காகப் படிக்காமல், புரிந்துகொண்டு படிக்க வேண்டும். மதிப்பெண் வாங்கவில்லை என்றால், அவர்கள் மோசமானவர்களும் இல்லை. நிறைய மதிப்பெண் வாங்குவதால், அவர்கள் நல்லவர்களும் இல்லை.
பா.சு. ஸ்ரீநாகமணிகண்டன், 10ஆம் வகுப்பு
மதிப்பெண் என்பதை ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கவேண்டும். படிக்காதவர்களும் தொழிலில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு, தமிழகத்திலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன. படித்தவர்களுக்குத்தான் மதிப்பு என்றால், சமீப காலமாக பொறியியல் படிப்புக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?!
மு. நிதன்யா, 11ஆம் வகுப்பு
கிரிக்கெட்டில் சாதித்த, டெண்டுல்கர், 10ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர் என்று சொல்வார்கள். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கலாம். யாருடனும், யாரையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மதிப்பெண் ஒரு பொருட்டல்ல.
செ. சபரீஷ், 11ஆம் வகுப்பு
மதிப்பெண் என்பது ஒரு அளவுகோல் மட்டுமே. அதை வைத்துக்கொண்டு, ஒரு மாணவனின் ஒட்டுமொத்த திறமையையும் எடை போடக்கூடாது. காமராஜர் போன்ற மேதைகள் என்ன படித்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வி அனைவருக்கும் அடிப்படையானது. அதை, கல்விக்கூடங்களில் மட்டும்தான் பெறமுடியும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மதிப்பெண்ணை வைத்து எந்த மாணவனையும் எடை போடக்கூடாது.

