PUBLISHED ON : ஆக 08, 2016

சங்கர்: டேய்ய்ய் முன்னா...! அமெரிக்கா தேர்தல் மாதிரி ரொம்ப பரபரப்பா இருக்குற, என்ன விஷேசம்?
முன்னா: பரபரப்பாவும் இல்ல சொரசொரப்பாவும் இல்ல. ஆமா... இப்போ ஏன் அமெரிக்காவ என்கூட கோக்குற?
ச: நீ பாக்குறதுக்கு அமெரிக்கன் மாதிரி ரொம்ப அழகா இருக்குற அதனாலதான்.
மு: ஆக்ச்சுவலி நான்தான மொக்கை போடணும். நமக்குக் கொடுத்துருக்குற ரோல் என்னன்னு புரிஞ்சு பேசுடா. ஹி.. ஹி... எனக்கு ஒரு சந்தேகம் வருது!
ச: சந்தேகமா..? என்னவா இருந்தாலும் பாத்து பக்குவமா கேளுடா.
மு: தேர்தல்ன்னு வந்தாலே, “சூடுபிடித்தது பிரசாரம்”ன்னு சொல்றாங்களே. அது என்ன சூடு? ஏன் சூடு?
ச: அது வந்து முன்னா... அரசியல் பேசுற வயசு இல்ல இது. அதனால ஃப்ரீயா விடுவோமே.
மு: நல்லா சமாளிக்குற. எவ்வளவு நாளுக்குத்தான் நீயும் ஷார்ப்பாவே இருப்ப! உன்னோட மூளைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடு! ஹா.. ஹா...
ச: பதிலுக்குக் கிண்டல் பண்றயா? நம்மளச் சுத்தி நடக்குற நாட்டு நடப்புகளை எல்லாமே தெரிஞ்சுக்கோடான்னு உன்ன ஊக்குவிச்சது தப்பா?
மு: ஊக்கும் விக்க வேணாம், பாக்கும் விக்க வேணாம். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் பேசி சீரியல் மாதிரி ஆக்கிடாத.
ச: ஆமா... ஆமா... “உணர்ச்சி வசப்பட்டா சிந்திக்குற ஆற்றல் போய்டும், வன்முறை எண்ணங்கள் தோன்றும்”ன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.
மு: அடப்பாவிகளா! ஆராய்ச்சி பண்றதுக்குண்ணே ஒரு குரூப் இருக்கும்போல. எல்லாத்தையும் அலசி ஆராய்ச்சி பண்ணிக் காயப் போடுறாங்களே.
ச: இந்த மாதிரி ஆராய்வது புதுசு இல்ல. திருவள்ளுவர் காலத்துல இருந்தே இருக்குடா!
மு: திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனது மட்டுமில்லாம ஆராய்ச்சி வேற பண்ணியிருக்காரா?
ச: திருக்குறள்ல பொருட்பால் பகுதியில், நட்பியல் பிரிவில், நட்பாராய்தல்ன்னு ஒரு அதிகாரம் வருது. அதுல, 791ல இருந்து 800 வரைக்கும் நட்பு பற்றி ஆராய்ச்சி பண்ணியிருக்காரு!
மு: நல்லவேளை. உணவு செரிக்குற ஆராய்ச்சி, சிந்திக்குற ஆராய்ச்சி மாதிரி வேற ஏதாச்சும் பண்ணிருப்பாரோன்னு பயந்துட்டேன்.
ச: இந்த மாதிரிக் காரணமே இல்லாம பயப்படுறத ஃபோபோஃபோபியா (Phobophobia)ன்னு சொல்லுவாங்க.
மு: அடேய்ய்ய்ய்... போதும்டா!
