எளிய முறையில் யோகாசனம் - பனைமரம் போல உடலை வளைப்போமா...!
எளிய முறையில் யோகாசனம் - பனைமரம் போல உடலை வளைப்போமா...!
PUBLISHED ON : மார் 20, 2017

தீர்யக தாடாசனம்
'தீர்யகம்' என்றால், வளையும் என்று பொருள். 'தாடா' என்பது பனைமரத்தைக் குறிக்கும். நம் உடல் வளைந்த பனைமரத் தோற்றத்தைப் பெற்றிருக்கும். ஆகையால், இந்த ஆசனத்திற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்யும் முறை:
I
1. கால்களை ஓர் அடியிலிருந்து ஒன்றரை அடிவரை அகட்டி வைத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்று கொள்ளவும்.
2. முகத்தை நேராக நிமிர்த்தி, கண்பார்வை நேர் எதிரே இருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மேல் பதிந்திருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
3. மூச்சை உள்ளிழுத்தவாறு கைவிரல்களைக் கோத்துக் கொண்டு, கைகளை தலைக்கு மேலே கொண்டு போய், உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்குமாறு நீட்டி வைத்துக் கொள்ளவும்.
II
4. மெதுவாக மூச்சை வெளிவிட்ட படியே வலது பக்கம் சரியவும்.
5. கைகளை மடக்காமல், முன்னால் குனியாமல் அல்லது பின்னால் வளையாமல் சரியாக பக்கவாட்டில் வளைந்து, வலது கையால் தலையை தாங்கிக்கொண்டு சிறிதுநேரம் அப்படியே நிற்கவும்.
6. ஒன்பது அல்லது பத்து முறை மூச்சை இழுத்து, மெதுவாக வெளிவிடவும்.
III
7. பிறகு மூச்சை உள்ளிழுத்தவாறு, நேராக நிமிர்ந்து வரவும்.
8. கைகளை தலைக்கு மேலே கொண்டு வரவும்.
9. சிறிதுநேரம் கழித்து, இடது பக்கம் சரிந்து ஆசனத்தில் சிறிதுநேரம் இருந்து விட்டு நேராக வரவும்.
IV
10. இரண்டு பக்கமும் முடித்தபின், மெதுவாக கைகளை கீழே இறக்கி பக்கவாட்டில் கொண்டு வரவும்.
பலன்கள்:
* தாடாசனத்தில், நமக்கு நேர்கோட்டில் மேல் நோக்கி நன்கு தசைகள் இழுக்கப்பட்டன.
* இந்த ஆசனத்தில், பக்கவாட்டில் தசைகளை இழுத்து விடுவதால், இந்த ஆசனத்தின் மூலமும், உயரத்தை அதிகரிக்க முடியும்.
* இந்த ஆசனத்தில், வலது இடது பக்கங்களுக்கிடையே சமநிலை உண்டாகிறது.
* ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
* நுரையீரல்களில் நன்கு வேலை நடக்கத் தொடங்குவதால், நமக்கு சுவாசக் கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.
- ஆர்.தங்கலமி, விவேகானந்த கேந்திரம்

