PUBLISHED ON : நவ 26, 2018

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுக் கைகழுவும் இடத்தில் நான்கைந்து மாணவர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். நான் கைகழுவப் போனபோது, இது சற்று வித்தியாசமாக இருந்தது. என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கத் தொடங்கினேன். கையில் நோட்டுப் புத்தககத்தில் என்னவோ குறித்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள், எத்தனை மாணவர்கள், ஒவ்வொரு குழாயையும் பயன்படுத்துகிறார்கள், எத்தனை நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் குறித்துக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு குழாய் என்று கணக்கு போலிருக்கிறது.
உணவு இடைவேளை அரைமணி நேரம். வேகவேகமாக மாணவர்கள் கைகழுவிக் கொண்டு இருந்தார்கள். ஒருசிலர், தங்கள் உணவுப் பாத்திரத்தையும் விரைவாகக் கழுவினார்கள். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நான்கைந்து மாணவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
இதேபோல், இன்னும் இரண்டு பள்ளிக் கட்டடங்கள் உண்டு. அங்கேயும் மாணவர்கள் வந்து கை கழுவுவார்களே? உடனே அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கப் போனேன். அங்கேயும் மாணவர்கள், இதுபோல் விவரங்களைக் குறித்துக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது கட்டடத்துக்கு அருகே போனபோது உமா மிஸ் நின்றுகொண்டு இருந்தார்.
“இது என்ன மிஸ்? ஸ்டூடன்ட்ஸ் என்ன செய்யறாங்க?”
“இதுக்கு வாட்டர் ஆடிட்னு பேரு கதிர். தண்ணீர் கணக்கெடுப்பு. நம்ம பள்ளிக்கூடத்துல எவ்வளவு தண்ணீர் செலவாகுது, எதெதுக்கெல்லாம் செலவாகுது, எப்படி செலவாகுதுன்னு கணக்கெடுப்பு செய்யறோம்.”
“ஓ! கை கழுவுற இடத்துல மட்டும்தானா?”
“இல்ல, டாய்லெட்டுல கூட பார்த்துக்கிட்டு இருக்கோம்.”
நான் சட்டென்று சிரித்துவிட்டேன், “டாய்லெட்டுல கூடவா மிஸ்?”
“இது சிரிக்கறதுக்கு ஒண்ணுமில்ல கதிர். அங்கேதான் நிறைய தண்ணீர் செலவு ஆகும்.”
நான் அமைதியானேன். உண்மைதானே? ஆனால், இதெல்லாம் எதற்குச் செய்யவேண்டும்? கேட்டேன்.
“நமக்கு தண்ணீர் பத்தி எந்தக் கவனமும் இல்லை. அது எங்கே இருந்து வருது, எப்படி வருது, போதுமான அளவு இருக்கா, எதிர்காலத்துலேயும் இதே அளவு இருக்குமா… இப்படியெல்லாம் யோசிக்கறதே இல்லை. ஏதோ தண்ணீர் எப்பவுமே இருக்கும்ங்கற நினைப்புல கண்டபடி வீணாக்கறோம். எதிர்காலத்துல தண்ணீருக்காக அவதிப்படப் போறோம்ங்கறது நிறைய பேருக்குப் புரியலை.
தண்ணீரைப் பத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நம்ம பள்ளிக்கூடத்துல, வீட்டுல, சுற்றுப்புறங்கள்ல எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துறோம், எவ்வளவு வீணாக்கறோம்ங்கற புரிதல் ஏற்படணும். அதுவும் உன்னை மாதிரியான மாணவர்களுக்கு ஏற்பட்டாத்தான், அது எதிர்காலத்துக்கும் பயன் உடையதாக இருக்கும்.”
“அதுக்கு என்ன பண்ணனும் மிஸ்?”
“முதல்ல, நாம எவ்வளவு தண்ணீர் செலவு செய்யறோம்ங்றதைக் கண்காணிக்கணும். இதுவும் பணத்தைச் செலவு செய்யறது மாதிரிதான். எப்படி எண்ணி, எண்ணி செலவு செய்வோமோ, அப்படித் தண்ணீரையும் செலவு செய்யணும். சிக்கனம் வேணும். தேவைப்பட்ட இடத்துல, தேவைப்படுற அளவு செஞ்சா போதுங்கற எண்ணத்தை ஏற்படுத்தணும். இப்போ, இங்கே 'தண்ணீர் கண்காணிப்பாளர்கள்' போட்டிருக்கேன். இவங்க ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு குழாயையும் எவ்வளவுபேர் பயன்படுத்துறாங்கன்னு கணக்கெடுப்பாங்க. இன்னொரு குரூப், பைப்லைன்ல எங்கெல்லாம் தண்ணீர் ஒழுகுது, உடைப்பு ஏற்பட்டு இருக்குதுன்னு பார்க்கும். இன்னொரு குரூப், இப்படி கைகழுவுற தண்ணீரெல்லாம் எங்கே போகுது, சாக்கடைக்குப் போகுதா? இல்ல, ஸ்கூல் பின்னாடி இருக்கற தோட்டத்துக்குப் போகுதான்னு பார்க்கும். அதேபோல், வாட்டர் மீட்டரைச் செக் பண்ணி, அதனோட ரீடிங்கை ஒவ்வொரு நாளும் குறிச்சு வெச்சுக்குவாங்க. எத்தனை முறை, எத்தனை நேரம், நிலத்தடி நீர் மோட்டரைப் போடறாங்கன்னு குறிச்சுப்பாங்க.
ஒவ்வொரு மாசமும் ரெண்டு நாட்கள் இப்படி கணக்கெடுத்துக்கிட்டே வந்தா, நம்மோட தண்ணீர் செலவு பேட்டர்ன் தெரிஞ்சுடும். அதுக்கப்புறம், இதில் சிக்கனத்தைக் கொண்டுவரணும்.
எங்கெல்லாம் தண்ணீர் வீணாகுதுன்னு தெரிஞ்சுபோயிடும் இல்லையா? அதை எப்படிக் குறைக்கறதுன்னு திட்டமிட்டு, ஸ்டூடன்ட்ஸுக்குச் சொல்லிக் கொடுக்கணும். தண்ணீரைச் செலவு செய்யாமல் இருக்க முடியாது, ஆனால், அதைப் பொறுப்போட செய்யணும். தண்ணீர் மிகப்பெரிய கொடை, இயற்கையோட வரம். தண்ணீர் இருக்கிற இடம் தேடி நகர்ந்து நகர்ந்துதான், மனித நாகரிகமே முன்னேறிச்சு. அதைத் துச்சமாக மதிக்கக்கூடாது.
முதல்ல தண்ணீர் எங்கேயிருந்து வருது, அது போதுமான அளவுக்கு இருக்காங்கறதைப் பத்திய தெளிவை ஏற்படுத்தணும். மற்ற பொருட்கள் மாதிரி, செயற்கையாக, தண்ணீரை உற்பத்தி செய்யமுடியாது என்ற உண்மையைப் புரியவைக்கணும். அது எல்லையுள்ள ரிசோர்ஸ். மழை பெஞ்சாதான், கூடுதல் தண்ணீர் கிடைக்கும். அப்படின்னா, கிடைக்கக்கூடிய தண்ணீரை சேமிக்கறதும், சிக்கனமா செலவு செஞ்சு, எதிர்காலத்துக்கு பத்திரப்படுத்தறதும் மிக மிக அவசியம்.”
நான் இப்படி யோசித்ததே இல்லை. தண்ணீரையும் காற்றையும் இயற்கையால் மட்டுமே வழங்க முடியும். அதை, மக்கள் அனைவர் தேவைக்கும் ஏற்ப, போதுமான அளவு, செயற்கையாக உற்பத்தி செய்யவே முடியாது என்கிற உண்மை என்னைத் தாக்கியது. இந்த உண்மை அனைவரையும் போய்ச் சேருமானால், அவர்களுடைய பயன்பாடு இன்னும் பொறுப்புணர்வோடு இருக்குமே?
“நிச்சயமா. நாம இந்த உண்மையை உணர்வதே இல்லை. தெற்கு ஆஸ்திரேலியாவுல, கிட்டத்தட்ட 560 பள்ளிகளில் தண்ணீர் சேமிப்பதைச் சொல்லிக்கொடுக்க, தனி இயக்கமே நடக்குது. எப்படி சாரண, சாரணியர் இயக்கம் இருக்கோ, அப்படி அங்கே 'வாட்டர்வைஸ் ஸ்கூல்'ங்கற இயக்கம் நடைமுறையில் இருக்கு. பள்ளிகளில் சேமிப்பைத் தெரிந்துகொள்ளும் மாணவர்கள், அதைச் தங்கள் வீட்டிலேயும், வாழக்கூடிய சமூகத்துலேயும் கொண்டு போய்ச் சேர்க்கறாங்க. இப்போ கத்துக்கற பாடம், அவங்களோட வாழ்க்கை முழுவதும் தொடரும்… அது மாதிரியான முயற்சியைத்தான் நான் இங்கே ஆரம்பிக்கலாம்னு பார்க்கறேன்…இதுக்கு 'சிறு துளி'ன்னு பெயர் வெச்சிருக்கேன்.”
உமா மிஸ் சொல்லி முடித்தபோது, ஆச்சரியமாக இருந்தது. சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு இதுதான் அர்த்தமோ?
