PUBLISHED ON : செப் 09, 2019

22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கிறது. இதன் ஆசிய கண்டத்துக்கான தகுதிச் சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இந்தத் தகுதிச் சுற்றின் 3வது ரவுண்டில் 40 அணிகள் இடம் பெற்றுள்ளன. இவை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'இ' பிரிவில், ஓமன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் 87வது இடத்தில் உள்ள ஓமனை கௌகாத்தியில் எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு கேப்டன் சுனில் செத்ரி கோல் அடிக்க 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அடுத்த பாதியில் ஓமன் வீரர் அல் மந்தர் இரண்டு கோல் அடித்து அதிர்ச்சி தந்தார். முடிவில் ஓமன் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. வருகிற 10ஆம் தேதி இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் கத்தார் அணியை தோகாவில் சந்திக்கிறது.
