PUBLISHED ON : மே 29, 2017

சுந்தர ராமசாமி - 30.5.1931 - 14.10.2005
நாகர்கோவில், கன்னியாகுமரி
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். நாவல், சிறுகதை, கவிதை என, மூன்று துறைகளிலும் தன்னுடைய தடத்தை ஆழமாகப் பதித்தார். தென் மாவட்ட இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவிக்க, இலக்கிய அமைப்பை நடத்தினார். இத்தனை புகழுக்கும் சொந்தக்காரர் 'பசுவய்யா' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிய சுந்தர ராமசாமி.
தாய்மொழி தமிழ். குழந்தைப் பருவத்தில் கேரளத்தில் இருந்ததால், மலையாளம் கற்றார். 8 வயதாக இருந்தபோது, நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். அப்போது கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததால், இவரது படிப்பும் மலையாளத்திலேயே தொடர்ந்தது. அதன்பிறகு, 18 வயதில் தமிழ் படிக்கும் ஆர்வம் வந்ததால், தானாக முயற்சித்துப் படிக்கத் தொடங்கினார். இவருக்கு உதவியாக 'மணிக்கொடி' இலக்கிய இதழையும், நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும், அவரது அம்மா படித்துக் காட்டினார். சொற்களில் சிக்கனம், நேர்த்தியான மொழிநடையுடன் 21 வயதில், தமிழில் கதை எழுத ஆரம்பித்தார்.
இளமைப் பருவத்தில், தொ.மு.சி. ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால், மார்க்சிய தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டார். 1953ம் ஆண்டு, தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்த 'சாந்தி' பத்திரிகையில், இவருடைய 'தண்ணீர்' கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
1988ல், 'காலச்சுவடு' என்ற காலாண்டு இதழைத் தொடங்கி, உயர் தரமான படைப்புகளையும், புதிய சிந்தனைகளையும் வெளியிட்டார். தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. இவ்வாறு, நவீனத் தமிழ் இலக்கியத்தை பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் சென்றதில் பெரும்பங்கு சுந்தர ராமசாமியினுடையது.
இவருடைய முக்கியமான படைப்புகள்:
நாவல்கள்
* ஒரு புளியமரத்தின் கதை
* ஜே.ஜே. சில குறிப்புகள்
* குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
மொழி பெயர்ப்புகள்
* செம்மீன், தோட்டியின் மகன்- (புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை
கவிதைத் தொகுப்புகள்
* நடுநிசி நாய்கள்
* யாரோ ஒருவனுக்காக
* 107 கவிதைகள் (எழுதிய அனைத்துக் கவிதைகளும்)
