
'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி' என்ற மத்திய கடலாராய்ச்சி நிறுவனத்தில், விஞ்ஞானியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் கண்ணப்பா பழனியப்பன். அப்போது, கப்பல் அடிப்பாகத்தின் பழுதுப்பணி ஆய்வுக்காக, கடலுக்குள் ஆட்கள் இறக்கிவிடப்படுவார்கள். அதற்காக ஒப்புதல் பெறுவது, தொழில் தெரிந்த ஆட்கள் இல்லாமை என்று பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மேலும், கண்காணிப்புப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் ஆர்.ஓ.வி. என்கிற கடல்மூழ்கி உபகரணங்களின் எடையும் டன் கணக்கில் இருந்தது.
இந்தப் பிரச்னை ஒரு கப்பலுக்கு மட்டுமானதல்ல; ஒட்டுமொத்த துறைக்குமானது என்பதை உணர்ந்தார் கண்ணப்பா. இதற்குத் தீர்வாக, அவரது நண்பர் ஜான் மத்தாயுடன் இணைந்து, இந்தியாவின் முதல் வணிகரீதியான நீர்மூழ்கி டிரோன் கேமரா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர்களிடம் பேசியதிலிருந்து...
“எனது பூர்வீகம் காரைக்குடி. ஆனால், வளர்ந்தது, படித்தது எல்லாம் கேரளம். நானும், ஜான் மத்தாயும் ஒன்றாக, திருவனந்தபுரத்தில் பொறியியல் படித்தோம். அப்போதே, ரோபோடிக்ஸ் துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக, நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளோம்.
கடலாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும்போது, கப்பலின் அடிப்பாகத்தில் பழுது ஆய்வு செய்வதில் இருந்த சிக்கல்கள் தெரிய வந்தது. கடலுக்குள் ஆட்கள் இறங்கி, பழுது பார்ப்பதற்கு முன்னர், அவர்களுக்கு உதவியாக நீர்மூழ்கி கேமரா இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
ஐ.ஐ.டி. டில்லியில் படித்துக்கொண்டிருந்த மத்தாயிடம் பேசினேன். இருவரும் இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இறங்கினோம். அப்படி உருவானதுதான் 'IROV' டெக்னாலஜிஸ்” என்கிறார் கண்ணப்பா.
“குறைந்த எடையில் உயர்தரமான கேமராவுடன் கூடிய நீர்மூழ்கியை உருவாக்கியுள்ளோம். இதை, 300 அடி ஆழத்துக்கு இறக்கி, கண்காணிக்க முடியும். நேரடிக்காட்சி வசதி உள்ளது. இந்தியாவில், வணிகரீதியாக இதை முதலில் தயாரித்திருப்பது நாங்கள்தான். எங்கள் நிறுவனத்தில் தற்போது 8 பேர் உள்ளோம்.
பாதுகாப்புத்துறையில், எங்கள் கண்டுபிடிப்புக்கு ஏராளமான தேவை இருக்கிறது. கடல்ரோந்து, அணை பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, தீயணைப்புத் துறை என்று பல்வேறு துறைகளில் இருந்தும் எங்களைத் தொடர்பு கொள்கின்றனர். ஒவ்வொரு பயன்பாடும் தனித்துவமானது என்பதால், நாங்கள் அதற்கேற்ப எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறோம். முழுமையாகத் தானியங்கி நீர்மூழ்கிக் கேமராவை உருவாக்குவதே எதிர்காலத் திட்டம். தற்போது, அரசுக்கு இந்த உபகரணத்தைத் தயாரித்துக் கொடுக்கிறோம்” என்றார் ஜான் மத்தாய்.

