PUBLISHED ON : செப் 24, 2018

இயற்கையாய் பொங்கும் திறமைகள் வெகுநாள் மறைந்து கிடக்காது. அப்படி ஒரு திறமை கொண்டவர்தான் ஆமிர் அலி. சாதாரண எலெக்ட்ரீஷியனின் மகனான இவருக்கு, அமெரிக்காவின் ஃபிரிஸ்ஸான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது; ஆண்டு வருமானம், 73 லட்சம் ரூபாய்.
டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மிலியா இஸ்லாமியா மத்தியப் பல்கலைக்கழகத்தில், எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றுபவர், ஷம்ஷாத் அலி. இவரது மகன் முகம்மது ஆமிர் அலி; படிப்பில் படுசுட்டி. ஆமிர் அலி, பள்ளியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. மூன்றாண்டு முயற்சி செய்தும் இடம் கிடைக்காததால், மெகானிக்கல் பிரிவில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார் ஆமிர்.
பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து அறிய ஆமிர் அலிக்கு அதிக ஆர்வமிருந்தது. எனவே, அதிலேயே அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
செலவில்லாமலேயே எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான சாத்தியம் குறித்து அவர் ஆய்வு செய்து வந்தார். பேராசிரியர் வாக்கர் ஆலம் வழிகாட்டலின் பேரில், இதுதொடர்பான திட்டக்கருத்துருவை ஆமிர் வடிவமைத்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தன. இதைக் கண்டு வியப்படைந்த பேராசிரியர் ஷீஷான் உசைன், அந்த ஆய்வறிக்கையை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றினார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஃபிரிஸ்ஸான் மோட்டார்ஸ் வொர்க்ஸ் (Frisson Motor Works). இந்நிறுவனம், ஆமிர் அலியின் ஆய்வறிக்கையைப் பார்த்தது. பின் பல்கலைக்கழகம் மூலம் தொடர்பு கொண்டு ஆமிர் அலியிடம் பேசியது. ஸ்கைப், லிங்கட்இன், போன் என பல்வேறு கட்ட உரையாடல்களுக்குப் பிறகு, ஆமிர் அலியை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு எடுத்துக் கொண்டது. அந்நிறுவனத்தின் பேட்டரிப்பிரிவு நிர்வாகப் பொறியியலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டு ஊதியம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.72.3 லட்சம்).
“பேட்டரி கார்களில், சார்ஜ் செய்வதுதான் பெரும் சவால். அதற்குத் தீர்வு கிடைத்தால், ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சி நடக்கும். எனது திட்டம் வெற்றிபெற்றால், சார்ஜ் செய்வதற்கான செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்” என்கிறார் ஆமிர் அலி.

