பழந்தமிழகத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்கும் புதிய தகவல்கள்
பழந்தமிழகத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்கும் புதிய தகவல்கள்
PUBLISHED ON : செப் 10, 2018

உலகை வியக்கவைத்த டமாஸ்கஸ் வாட்கள் (Damascus sword), கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. மிக மெலிதான, ஆனால் உறுதியான இந்த வாளின் தாயகம் தமிழகம். இரும்பை உருக்கி, மிகவும் வலிமையானதாக ஆக்கும் தொழில்நுட்பம் பழந்தமிழர்களிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில தொல்பொருட்கள், சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வுசெய்த பேராசிரியை சாரதா ஸ்ரீனிவாசன், பழந்தமிழர்களின் உலோகவியல் தொழில்நுட்பத்தை உறுதிசெய்யும் சில தரவுகளைக் கண்டறிந்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தைச் (National Institute of Advanced Studies - NIAS) சேர்ந்தவர் சாரதா. வெண்கலம் மற்றும் டமாஸ்கஸ் இரும்பு ஆகிய இரண்டு உலோகப் பொருட்களையும் ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய உறுதியான உலோகக் கலவைகளை உருவாக்க, இரும்பை மரத்துண்டுகளுடன் சேர்த்து 1,400 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான உயர் வெப்பநிலையில் வெகுநேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது மரத்துண்டுகள் கரியாக மாறி, அந்தக் கார்பன் அணுக்கள் இரும்பை மேலும் கடினமானதாக மாற்றும். இதுவே டமாஸ்கஸ் வகை இரும்பின் வலிமைக்குக் காரணம் என்று தனது ஆய்வுக்கட்டுரையில் அவர் விவரித்துள்ளார். இதன்மூலம் பழந்தமிழ் நாட்டின் உருக்கு தொழில்நுட்பங்களின் மீது புதிய வெளிச்சம் விழுந்துள்ளது. அதற்கு தொல்லியல் ஆராய்ச்சிகளை அறிவியல் பூர்வமாகச் செய்யும் முறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று சாரதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
