PUBLISHED ON : டிச 30, 2019

தமிழகத்தில் அகழாய்வு செய்யாமலே, கிணற்றிலும் குளத்திலுமே அள்ள அள்ளக் குறையாத சிற்பங்களும் கல்வெட்டுகளும் கிடைப்பது ஒரு வகை அதிர்ஷ்டம்தான். கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில், உள்ளது கௌசிகா என்னும் ஆறு. அதன் தென்பகுதியில் அமைந்துள்ளக் காலிங்கராயன் குளம், அந்தக் குளத்தில் தொன்மையான வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட சோழர் காலக் கல்வெட்டின் ஒரு பகுதி சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன்மூலம் கிடைத்த சில தகவல்கள்:
பத்தாம் நூற்றாண்டில், கொங்கு நாடு, சோழ தேச ஆதிக்கத்தின் கீழ் வந்தது. முதல் தலைவர், வீர சோழர். கொங்குச் சோழர் என்னும் வம்சாவளியைத் தோற்றுவித்தவர் இவரே. இவருக்குப் பின், இவருடைய மகன் கோக்கலிமூர்க்கர் என்பவரும், அவரையடுத்து அவரது மகன் ஸ்ரீ விக்கிரம சோழர் என்பவரும் ஆட்சி புரிந்துள்ளனர். கல்வெட்டில் இடம்பெற்றிருப்பது ஸ்ரீ விக்கிரம சோழரின் பெயரே. கல்வெட்டு கிடைத்த குளம் அருகே ஏதேனும் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மேலும், கோவில்பாளையத்தின் வரலாற்றுப் பெயர், கவையன்புத்தூர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- குறிஞ்சி
