PUBLISHED ON : அக் 07, 2019

இன்று 'கையேந்தி பவன்'கள் என்று சொல்லப்படும், சாலையோர உணவகங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. பழங்காலத்தில் கிரேக்கர்கள், வறுத்த மீன்களை சாலையோரம் வைத்து விற்பனை செய்தார்கள்.
சீனாவில் பணக்காரர்களும் இதைச் சாப்பிட்டுள்ளார்கள். தங்களது வேலைக்காரர்களை அனுப்பி சாலையில் விற்கும் சிற்றுண்டிகளை வாங்கிவரச் செய்திருக்கிறார்கள்.
பண்டைய ரோமில், சாலையோர உணவுகள், ஏழை எளிய மக்களுக்காகவே தயாரிக்கப்பட்டன. குறிப்பாக, நகரத்தில் வாழ்ந்த ஏழை எளிய மக்கள், மிகச்சிறிய அறைகளில் வசித்தனர்.
சமைப்பதற்கு சமையலறை இல்லை. இவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், சாலையோர உணவுகளைச் சாப்பிட்டே நாட்களை நகர்த்தினர்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெரும்பாலோர் 'துரித உணவு'களை நாட ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாகவே சாலையோர உணவகங்களில் பல மாற்றங்கள்.
நாவூற வைக்கும் விதவிதமான நொறுக்குத் தீனி வகைகள், சிற்றுண்டி வகைகள் போன்றவை குறைந்த விலையில் சாலையோரக் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தன.
இந்தியாவில், மொகலாய உணவுகளே பெருமளவு சாலையோர உணவகங்களில் பரிமாறப்படுகின்றன. இதற்கு அடுத்து, ஐரோப்பாவில் இருந்து நாம் பெற்ற 'சாண்ட்விச்' வகைகள்.
அதன் பின்னர் தான் உள்ளூர் உணவு வகைகள். இந்தியாவில், நாளொன்றுக்கு 2.5 கோடி பேர் சாலை உணவகங்களையே நாடுகின்றனர் என்று தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.
தற்போது சாலையோர உணவகங்கள் இந்தியர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டது என்றே சொல்லலாம்.
தலைநகர் டில்லியில் ஒவ்வோராண்டும், 'தேசிய சாலையோர உணவு விழா' (நேஷனல் ஸ்ட்ரீட் ஃபுட் பெஸ்டிவல்) நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் புகழ்பெற்ற சாலையோர உணவுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அதை உண்ணவும் வாய்ப்பு பெறுகின்றனர். மேலும், இந்தத் திருவிழாவை உணவுப் பாதுகாப்புக் கழகம் நடத்துவதால், அதன் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் எந்தக் குறையும் ஏற்படுவதில்லை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், சார்மைன் ஓ'பிரெய்ன் என்கிற புகழ்பெற்ற உணவு ஆசிரியர். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்திய உணவு வகைகள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
தம் பயண அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தி பெங்குவின் ஃபுட் கைடு டு இந்தியா (The Penguin Food Guide to India) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இந்தியாவில், சாலையோர உணவுக் கடைகளிலேயே மிகவும் ருசியான, பிரெஷ்ஷான உணவு வகைகள் கிடைக்கின்றன என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உணவு வகைகளில் செட்டிநாடு உணவிற்குத் தனியிடம் உண்டு என்றும் அவர் தெரிவிக்கிறார். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போன்ற நறுமணப் பொருட்கள், செட்டிநாட்டு உணவில் அதிகம் இடம்பெறும்.
இது, அவர்கள் வணிக ரீதியாக வெளிநாடுகளோடு தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான சாட்சி என்று ஓ'பிரெய்ன் குறிப்பிடுகிறார்.
-காரா
