PUBLISHED ON : ஜன 22, 2018

பிரிட்டனில் தனிமையில் வாழ்வோர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தொட்டுவிட்டது. அம்மக்களின் நலனுக்கு அரசு ஏதாவது செய்யவேண்டும் என சமீபத்திய ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
தனிமையில் வாழ்வது, நாளொன்றுக்கு 15 சிகெரட்டுகளை புகைப்பதால் வரும் கெடுதலைக் கொடுக்கக் கூடியது என்கிறார் மார்க் ராபின்சன். இவர், இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர்.
தொடர்ந்து வந்த இத்தகைய வேண்டுகோள்களை கவனித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் தனிமைவிரும்பிகளுக்குத் தனி அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ளார். டிரேசி கிரௌச் என்பவர் அதன் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். 2014இல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அதிகம் அறியாதவர்களாகவோ, சிறிய நட்புவட்டத்தை உடையவர்களாகவோ இருப்பது பெரும்பாலும் பிரித்தானியர்களே என்று கண்டறியப்பட்டது.
”நவீன வாழ்வின் முக்கியமான சிக்கலாக இருப்பது தனிமை. அதை எதிர்கொள்வதே இப்போதைய முக்கிய சவால். முதியவர்கள், தங்கள் அன்புக்குரியவரை இழந்தவர்கள் என தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள யாருமில்லாதவர்களின் வலியை போக்குவதே எங்கள் நோக்கம்” என்று தெரசா மே தெரிவித்துள்ளார்.
தனிமையில் வசிக்கும் வயதானவர்களை பள்ளிகள், மற்றும் இளைய தலைமுறைக் குடும்பங்களோடு உறவாடச் செய்வது; தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களுக்கு கெளன்சிலிங் அளிப்பது; உடல் நலத்தைப் பேண உதவுவது போன்ற செயல்களை இந்த அமைச்சகம் கவனிக்கும்.
நாடெங்கும் உள்ள அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் இந்த பிரச்னை குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவது, தேசிய அளவில் தனிமையினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு செயல்திட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சகம் பல்வேறு வடிவங்களில் குடிமக்களின் தனிமைத் துயரை தீர்க்க முயற்சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமை என்பது அங்கு மட்டுமல்ல இங்கேயும் இருள் தான். இதையே வள்ளுவர்,
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். (குறள்: 999) என்கிறார்.
அதாவது, பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
