PUBLISHED ON : ஜூன் 03, 2019
ஜார்ஜ் ஸ்டீபன்சன்
9.6.1781 - 12.8.1848
வைலம், இங்கிலாந்து.
சிறுவயதில் படிக்கும் ஆர்வம் இருந்தும், பள்ளி செல்ல வசதி இல்லை என்பதால் மாடு மேய்த்தார் ஸ்டீபன்சன்.
இயந்திரங்கள், இஞ்ஜின்களைக் கழற்றி மீண்டும் சரியாகப் பொருத்துவதுதான் இவரது பொழுதுபோக்கு. 17 வயதில் தந்தையுடன் நிலக்கரிச் சுரங்க வேலைக்குச் சென்றார். அதில் கிடைத்த தொகையின் மூலம், இரவுப் பள்ளியில் படித்தார்.
ஒருநாள் சுரங்கத்தில் ஏற்ப ட்ட விபத்தில் சிக்கிய அவரது தந்தையின் பார்வை பறிபோனது. ஓய்வு நேரங்களில் காலணி தயாரிப்பது, கடிகாரம் பழுதுபார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். நீராவி இயந்திரத்தை உருவாக்க அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு, ஓர் இரயிலை உருவாக்கினார். மரத் தண்டவாளத்தில் ஓடும் நீராவி இஞ்ஜினில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தார்.
ஸ்டாக்டன் என்ற ஊரிலிருந்து டார்லிங்டன் வரை இரும்பு தண்டவாளம் அமைத்து ஓட்டிக் காட்டினார். அதுதான் உலகப் புகழ்பெற்ற 'ராக்கெட் ' என்ற தொடர்வண்டி!
இதனால், ஸ்டீபன்சனின் புகழ் உலகெங்கும் பரவியது. இந்த மகத்தான கண்டுபிடிப்பால் மாபெரும் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இவர் நிர்ணயித்த இரயில் பாதைகளின் அகலமே, உலகம் முழுவதும் பின்னாளில் பின்பற்றப்பட்டது. தற்போது, சுரங்கங்களில் நாம் பயன்படுத்தும் 'பாதுகாப்பு விளக்கு' அறிவியல் படிக்காத ஸ்டீபன்சனின் கண்டுபிடிப்புதான்.
பல சுரங்கங்களை இணைக்கும் வகையில் பாதை அமைக்கும் பணியை அரசு இவரிடம் ஒப்படைத்தது.
தன் மகனுடன் சேர்ந்து இதைச் செய்து முடித்தார். இரயில் பாதைகளை அமைக்க 'ராபர்ட் ஸ்டீபன்சன்' எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இங்கிலாந்தில் இவர் அமைத்த உலகின் முதல் பொது இரயில் பாதைக்கான தண்டவாளங்கள் 'ஸ்டீபன்சன் பாதை' என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு, உலகின் மிகப்பெரிய போக்குவரத்தான இரயில்வே துறைக்கு அடித்தளம் அமைத்தது ஒரு படிக்காத மேதையே!
