PUBLISHED ON : மே 20, 2019

அஞ்சும் சோப்ரா
20.5.1977
புது டில்லி
இவரது தாத்தா வேத் பிரகாஷ், தடகள வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்; தந்தை கிஷன்பால், கோல்ஃப் வீரர்; சகோதரர் நிர்வண், கிரிக்கெட் வீரர் என, இவரது குடும்பமே விளையாட்டுத் துறையில் இருந்தது. அதிலிருந்து வந்து இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஏராளமான 'முதல்' சாதனைகளைப் படைத்த பெருமைக்குரியவர் அஞ்சும் சோப்ரா.
சிறுவயது முதலே இவருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் இருந்தே விளையாடி, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான டில்லி அணியில் இடம் பிடித்தார். அஞ்சும் சோப்ரா, ஒன்பது வயதிலிருந்து விளையாடத் தொடங்கியதால் திறமையான ஆட்டக்காரராக மாறினார். இடதுகை அதிரடி மட்டையாளர், வலது கை மிதவேகப் பந்துவீச்சாளர் என ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.
இங்கிலாந்து மகளிர் அணி 1995இல் இந்தியா வந்தபோது, டெஸ்ட் அணியில் விளையாட இடம் கிடைத்தது. மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் 4 அரை சதம் உட்பட 548 ரன்களை எடுத்தார். மொத்தம் 127 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 1 சதம், 18 அரை சதங்கள் உட்பட 2,856 ரன்களையும்
9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இவரது சதம் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அடித்த முதல் சதமாக அமைந்தது.
தொடர் சாதனைகளால் அஞ்சும் சோப்ரா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தார். விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் எதிர் அணியை வீழ்த்திய முதல் இந்தியப் பெண் கேப்டன் ஆனார். இவ்வாறு சாதனைகள் பல செய்து வரலாற்றில் இந்தியக் கிரிக்கெட்டின் அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறார் அஞ்சும்!

