PUBLISHED ON : செப் 09, 2019
சப்பாத்தி, நாண், பரோட்டா, தந்தூரி போன்றவை நம்முடைய உள்நாட்டு பிரெட் (ரொட்டி) உணவுகளாகும். முதன்முதலில், ஈஸ்ட்டை பயன்படுத்தி மாவைப் புளிக்கவைத்து பிரெட்டைத் தயாரிக்கும் முறை மேற்கு உலகில்தான் தொடங்கியது. அதிலும் குறிப்பாக காலனி ஆதிக்க காலங்களில், 'பேக்' (Balee) செய்யப்பட்ட பிரெட் உணவுகள் தயாரிக்கப்பட்டு உண்ணப்பட்டன.
இந்தியாவில், 1920-களில் தான் வணிக ரீதியாக பிரெட் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. அந்தக் காலத்தில் பிரெட் தயாரிக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கைகளாலேயே பிரெட் தயாரிக்கப்பட்டது. இந்தியா முழுக்க, 20 மாநகரங்களில் உள்ள தேநீர்க் கடைகளில் விற்கப்படும் தின்பண்ட வகையாக மட்டுமே பிரெட் புழக்கத்தில் இருந்தது. 1937-ஆம் ஆண்டில் கோல்கட்டா, மும்பை ஆகிய பெருநகரங்களில் இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பிரெட் நிறுவனங்கள், வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின. இந்தியா சுதந்திரம் பெற்றபின், சுகாதாரமான சூழ்நிலையில் இயந்திரங்கள் மூலமாக ரொட்டிகளைத் தயாரிக்கும் பிரெட் பேக்கரிகள் உருவாகின.
பிரெட்டின் கதை!
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன், புதிய கற்காலத்தில் (நியோலித்திக்) விவசாயம் செய்யும் முறை கண்டறியப்பட்டது. கோதுமை, பார்லி போன்ற உள்நாட்டுத் தானியங்கள் பயிரிடப்பட்டன. இதன்மூலம், மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்தார்கள். தானியங்களைத் தண்ணீருடன் சேர்த்து, சமைத்துச் சாப்பிட்டார்கள். இந்த உணவு, ருசியின்றி இருந்ததால், அவர்கள் மிகவும் அலுப்பாக உணர்ந்தார்கள்.
பல்வேறு விதமாக தானியங்களை மக்கள் சமைத்துப் பார்த்தார்கள். அப்படி ஒரு சமயம், தானியங்களைத் தண்ணீருடன் சேர்த்து அரைத்து மாவாக்கினர். மாவை, சூடாக்கப்பட்ட பரப்பில் வைத்துச் சமைத்துச் சாப்பிட்டார்கள். ஈஸ்ட் சேர்க்கப்படாத, புளிக்காத ரொட்டித் துண்டுகளின் பிறப்பு அந்த இடத்திலிருந்துதான் தொடங்கியது.
கோதுமை மாவு போன்றவற்றுடன் ஈஸ்ட் சேர்த்தல், மாவைப் புளிக்கவைத்து பிரெட்போல தயாரிக்கும் வழக்கம் எகிப்தியர்கள் மூலமே உலகிற்கு அறிமுகமானது.
- கொக்கோ

